அமெரிக்க- ஈரான் மோதலால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
Share
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (11) ஒரு பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமான தொகையால் வேகமாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சர்வதேச குறியீடான பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 2.47% ஆல் (2.30 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 95.40 டொலராகப் பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 2.89% ஆல் (2.60 டொலரால்) அதிகரித்து, ஒரு பீப்பாய் 92.63 டொலலர் வரை உயர்ந்துள்ளது.
எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மற்றும் இதர வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்து வகையான கப்பல்களுக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடப்படுவதாக ஈரானின் கூட்டு இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அந்த எல்லையைக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், வணிகக் கப்பல்கள் இன்னும் பாதுகாப்பாக அந்த கடல் வழிப்பாதை வழியாக பயணித்து வருவதாக அமெரிக்க இராணுவம் தனது ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த போதிலும், தங்களது போர்க்கப்பல்கள் எதன் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை பெரிய அளவிலான போருக்கான அறிகுறிகளைக் காட்டும் வகையில், அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.


