Type to search

Headlines மருத்துவம்

அடிக்கடி உண்ணக்கூடிய உணவுவகைகள் எவை?

Share

நான் 73 வயதுடைய பெண். நான்கு வருடங்களுக்கு முன்பு நெஞ்சில் ஓரளவு வலி ஏற்பட்டபோது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன். இதயத்தில் ஒரு பகுதி தடித்துள்ளதாக வும் ஒரு Silent Attack ஏற்பட்டுள்ளதாகவும் அத்துடன் குருதி அமுக்கம், கொலஸ்ரோல் உள்ளதாகவும் கூறி மருந்துகள் தந்தனர்.அந்த மருந்துகள் வாழ்நாள் பூராகவும் பாவிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மருந்துகள் Atenolol 50mg. Atovastatin 10mg. Ecosprin 75mg.Clopidogrel 75mg.கடந்த நான்கு வருடங்களாகத் தினமும் இவற்றைப் பாவித்து வருகிறேன். இடைக்கிடை தனியார் வைத்தியசாலையில் பரிசோதித்த போது எல்லாம் Normal என்று கூறினார்கள். நான் உண்ணும் உணவில் உப்பு, கொழுப்பு குறைத்து காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட்டு சுகமாக இருக்கிறேன்.தொடர்ந்தும் இந்த மருந்துகளைப் பாவிக்க வேண்டுமா? அல்லது நிறுத்தலாமா?

பதில்: உங்களுக்கு உயர்குருதியமுக்கம், இருதயத்திற்கான இரத்தக்குழாய்களில் கொலஸ்ரோல் படிவு மற்றும் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்ரோல் ஆகிய நோய்நிலைகள் இருப்பதை உங்கள் கடிதத்தின் மூலம் அறிய முடிகின்றது. நீண்டகாலமாக மருத்துவத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள், நீங்கள் தொடர்ந்தும் Aspirin ( Ecospirin), Atorvastatin மற்றும் Atenolol ஆகிய மருந்துகளை உள்ளெடுப்பது உங்களுக்கு எதிர்காலத்தில் இந்நோய்களால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்கும் என்பதை நிரூபித்து இருக்கின்றன.

இவை உங்களுக்கு மீண்டும் ஒரு மாரடைப்பு மற்றும் பாரிசவாதம் போன்ற இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும். இது உங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.நீங்கள் உள்ளெடுக்கும் Clopidogrel என்னும் மருந்தை வைத்தியருடன் கலந்தாலோசித்த பின் நிறுத்த முடியும்

உயர்குருதி அமுக்கத்திற்கான மாத்திரைகளை பாவிக்கஆரம்பித்தால் எதிர்காலத்தில் அதனை நிறுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?

ஆம் : நிறுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உதாரணமாக அதிகரித்த உடல்நிறை உடையவர்கள் நிறை குறைப்பு செய்யும் பொழுது இது சாத்தியமாகின்றது. சில சிறுநீரக நோய் நிலைகள் கட்டுப்பாட்டிற்கு வரும் பொழுதும் இது சாத்தியமாகின்றது. பிரசவ காலத்தில் தற்காலிக உயர்குருதி அமுக்க நிலை ஏற்படுபவர்களுக்கு பிரசவத்தின் பின்னர் இதற்கான மருந்துகளை நிறுத்தக் கூடியதாக இருக்கிறது. உயர்குருதி அமுக்க நிலை உள்ளவர்கள் தமது வாழ்க்கை முறைகளை மாற்றி ஒழுங்கான உடற்பயிற்சி, உணவுமுறைகளில் மாற்றம்,மன அமைதி வழிமுறைகள் போன்றவற்றை கடைப்பிடித்து வருவார்களாக இருந்தால் அவர்களின் மருந்துகளின் அளவைக் குறைத்துசில சமயங்களில் நிறுத்திக் கொள்ளக் கூடிய நிலைகளும் ஏற்படலாம். சில ஓமோன் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அவர்களின் அடிப்படை நோய் நிலை கட்டுப்பாட்டிற்கு வரும் பொழுது அதிகரித்த குருதி அமுக்க நிலையும் தானாக குறைந்துவிடும். இவர்களுக்கான மருந்துகளையும் நிறுத்திக் கொள்ள முடியும். உயர்குருதிஅழுக்கம் உள்ளவர்கள் தன்னிச்சையாக தாமாக இதற்கான மருந்துகளை நிறுத்திக்கொள்வதோ மாற்றிக் கொள்வதோ ஆபத்தானது. மருத்துவக்குழுவின்ஆலோசனையுடனேயே இவைசெயற்படுத்தப்பட வேண்டும். உயர்குருதி அமுக்கத்திற்கான மாத்திரைகளை பாவிக்க ஆரம்பித்தால் அதனை நிறுத்த முடியாது. எனவே அதனை பாவிக்காமலே இருந்து விடுவோம் என்று எண்ணிக்கொள்வது ஒரு தவறான ஆபத்தான சிந்தனை ஆகும். ஒருவரின் குருதி அமுக்கம் அதிகரித்துக் காணப்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மாத்திரைகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.

சீனிக்குப் பதிலாக பாவிக்கப்படும் இனிப்பூட்டிகள் பாதுகாப்பானவையா?

இவை மிகவும் இனிப்பான பதார்த்தங்களாக இருந்தபொழுதும், இவற்றுக்கு குருதி குளுக்கோசின் அளவை அதிகரிக்கும் தன்மையோ அல்லது உடல் நிறையை அதிகரிக்கும் தன்மையோ இல்லை. அத்துடன் இவற்றுக்கு இரத்தத்திலே, அல்லது உடலிலோ கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மைகூட இல்லை. சீனி, சர்க்கரை போன்ற இனிப்பு வகைகளைப் பாவித்தால் பற்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய பாதிப்புகள் செயற்கை வகையான இந்த இனிப்பூட்டிகள் பாவிப்பதால் ஏற்படமாட்டாது.
இந்த இனிப்பூட்டிகளின் பாவனையால் ஏதாவது ஆபத்து நிகழுமா? அல்லது உடற்பாதிப்புகள் ஏற்படுமா? என்பது சம்பந்தமாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அளவுடன் இவற்றை பாவிப்பது பாதுகாப்பானது என்பதை உறுதி செய்திருக்கின்றன. அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் எண்பது பாதுகாப்பானதல்ல என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.
பாயாசம், தேநீர், ஐஸ்கிறீம்வகைகள் மோதகம் போன்றவற்றுக்கும் இந்த இனிப்பூட்டிகளைப் பாவிக்க முடியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டுமல்ல குடும்பத்தில் எந்த நோய் உள்ளவர்களும் அதிகரித்த நிறை உள்ளவர்களும் நிறை அதிகரிப்பை தடுக்க விரும்புவர்களும் சீனி, சர்க்கரைக்கு பதிலாக இந்த இனிப்பூட்டிகளைப் பாவிப்பது பாதுகாப்பானது.

நிறை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் சுவைக்காகவும் பசியை போக்குவதற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் அடிக்கடி உண்ணக்கூடிய உணவுவகைகள் எவை?

நிறை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் சுவைக்காகவும் பசியை போக்குவதற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் அடிக்கடி உண்ணக்கூடிய உணவுவகைகளாகப் பின்வருவன வற்றைக் குறிப்பிடலாம். பழவகை குறிப்பாக கொய்யா, தோடை, அப்பிள், ஜம்பு, விளாம்பழம், பப்பாசி, வாழைப்பழம், நாவல் போன்றன. அத்துடன் எல்லாவிதமான மரக்கறிவகைகள் குறிப்பாக அகத்தி, முருங்கை, கோவா, கரட், பீற்றூட், தக்காளி, முள்ளங்கி, கீரைவகை, பயிற்றை,வெங்காயம், போஞ்சி, சிறகவரை, லீக்ஸ் போன்றவை. இத்துடன் பானங்களான மோர், இனிப்பூட்டிகள் சேர்த்த சீனி சேர்க்காத தேநீர், கோப்பி, பால், தேசிக்காய் தண்ணீர், குத்தரிசிக்கஞ்சி, தோடம்பழச்சாறு, இளநீர் போன்றவற்றை குறிப்பிடலாம். பால், முட்டை, மீன், இறால், தானிய வகைகள் போன்றவற்றை போதியளவு உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். இவை எமக்கு அதிகளவு புரதத்தை வழங்குவதுடன் பசியை கட்டுப்டுத்தவும் உணவில் சுவையை
கூட்டுவதற்கும் உறுதுணையாக இருக்கும்.

சி.சிவன்சுதன்
வைத்திய நிபுணர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link