புதுச்சேரிப்பயணம் 15
Share
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி புதுச்சேரியில் பலம் பொருந்தியதாக இருப்பதைக் காணமுடிகிறது.
அதேநேரம் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பனவும் புதுச்சேரி மாநிலத்தில் தங்கள் இருப்பை நிலை நிறுத்துவதில் அதீத கவனம் செலுத்துகிறது என்பதை அங்கு வைக்கப்பட் டுள்ள கட்சிப் பதாகைகள் உறுதி செய்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, மறைந்துபோன அரசியல் தலைவர்களின் பிரமாண்டமான உருவச் சிலைகள் மிகத் தத்ரூபமாக செதுக்கப்பட்டு, முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளமை புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் எத்துணை தூரம் நன்றி உடையவர்கள் என்பதைச் சான்றுப்படுத்தும்.
அதேநேரம் தமிழ் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் அந்த மக்கள் கொண்ட நாட் டமே பாரதியார் , பாரதிதாசன் போன்ற தமிழ்ச் சான்றோர்களை புதுச்சேரிமாநிலம் கொண்டாடுவதற்கு மூல காரணம் எனலாம்.
அதே சமயம் பாரததேச விடுதலையில் எங்ஙனம் தமிழ் நாடு முதன்மை பெற்றதோ அதுபோல புதுச்சேரியும் தனது தேசத்தின் சுதந்திரத்தில், இறையாண்மையில், சுயநிர்ணயத்தில் மிகவும் பற்றுறுதியுடன் இருந்துள்ளதென்பதை புதுச்சேரி நகராட்சியின் கடலோரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் நினைவாலயம் சாட்சியமாகும்.
ஆக, ஒட்டு மொத்தத்தில் தனக்கென தனி மாநில அரசு, தனிப் பொலிஸ் அதிகாரம், தனித்துவமான பொருளாதார முதலீடுகள், பிரமாண்டமான விடுதிகள், உல்லாசப் பயணிகளை ஈர்க்க வல்ல சுற்றுலாத்தளங்கள், ஆன்மீக சுகத்தைத் தரவல்ல திருக்கோவில்கள், ஊருக்கு அழகு தரவல்ல ஆறுகள், மலைத் தொடர்கள், சமதரைகள் என்பவற்றுடன் பிரான்ஸ் நாட்டின் கட்டிடக் கலைகள், நீண்டதும் நெடியது மான பழங்காலத்துக் கட்டடங்கள், கம்பன் கழகம் போன்ற தமிழ் வளர்க்கும் அமைப்புகள் அதிலும் மாநில அரசின் முழு ஆதரவோடு வரு டம் தோறும் நடக்கின்ற கம்பன் விழாக்கள் என எல்லாச் சிறப்பும் பெற்ற புதுச்சேரி மாநிலம் கம்பன் காட்டும் அயோத்தி மாநகருக்கு ஒப்பானதாய் இருப்பதைக் கண்டு பேருவகை அடைந்தேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் காரணமாக புதுச்சேரிக் கம்பன் கழகத்தின் உயரிய கம்பன் விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்ததென்பதை இவ் விடத்தில் பதிவிடுவது கட்டாயமானது.
அதேபோன்று புதுச்சேரிக் கம்பன் விழாவில் பங்கேற்ற கொழும்புக் கம்பன் கழகத்தின் பலமாக இருக்கின்ற மருத்துவர் ஸ்ரீஇரத்தினகுமார், கம்பவாரிதியின் அணுகத் தொண்டராக இருக்கும் கம்பநேசன் வாசுதேவா ஆகியோரின் ஆளுமை, அவர்கள் புதுச்சேரியில் உள்ள சான்றாண்மைப் பெருமக்களுடன் கொண்டுள்ள உறவுநிலை என்பனவெல்லாம் எம்மை வியக்க வைத்தன.
அதிலும்,பயண ஏற்பாடுகளின் போது மருத்துவர் ஸ்ரீஇரத்தினகுமார் அவர்களின் ஒழுங்கு படுத்தல்கள், முன்னாயத்தங்கள் அவரின் திட்டமிடல் பண்பின் ஆளுமையைத் துலாம் பரப்படுத்தின.
புதுச்சேரிப் பயணம் சென்னை விமான நிலையத்தில் முற்றுப் பெறுகிறது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஆடும் நடராஜப்பெருமானின் திருக்கோலம் என் இதயத்தை நெகிழ வைத்தது. கூடவே அந்த இடம் புனிதப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தின் புறப்பாட்டு வரிசையில் கட வுச்சீட்டைக் கொடுத்த போது, இந்தியாவுக்கு வந்ததன் நோக்கம் பற்றிய தொடர் கேள்விகள் வித்தியாசம் மட்டுமல்ல விசித்திரமாகவும் இருந்தது.
வழமையில் உள் நுழையும் போது எழுப்பப்படும் கேள்விகள் இங்கு வெளியேறும் போது வெளிக்கிட்டதுதான் வித்தியாசத்திற்கும் விசித்திரத்திற்கும் காரணமாயிற்று.
அந்த கேள்விகளின் நினைப்பு என்னுள் மீள் எழ, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் கொழும்பு கட்டுநாயக்கவின் ஓடு பாதையில் தரை யிறங்கிற்று.
முற்றும்.


