புதுச்சேரிப்பயணம் 14
Share
புதுச்சேரியில் பத்து ஆண்டுகள் பாரதியார் அடைக்கலம் புகுந்திருந்தார் என்பதற்குள் அந்தப் 10 ஆண்டுகளும் பாரதியாருக்கு மிகவும் மகிழ்வான காலமாகக் கடந்திருந்தது என்பதை புதுவையில் இருந்த போது அவர் எழுதிய குயில் பாட்டு, புதிய ஆத்திசூடி, பாப்பாப்பாட்டு, பெண் விடுதலைப் பாடல்கள் போன்றன உறுதி செய்கின்றன.
கூடவே புதுவை மணக்குள விநாயகர் பற்றிய பாரதியாரின் பாடல்களும் புதுவையின் சிறப்பைக் காட்டி நிற்கின்றன.
இத்துணை சிறப்பு மிக்க புதுவையில் மக்கள் மிகவும் மனநிறைவோடு வாழ்வதை அவர்களின் அகத்தழகு முகத்தினூடு உறுதி செய்கின்றது.
இஃது ஒருபுறமிருக்க, அங்கு மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கின்றவர்கள் எவருமே தலைக்கவசம் அணிவதில்லை.
சிலவேளைகளில் தலைக்கவசம் அணிவது அங்கு கட்டாயப்படுத்தப்படாமல் இருக் கிறதோ என்று எண்ணத் தோன்றும்.
தவிர, மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துகின்றவர்கள் வீதி நடைமுறைகளைப் பின் பற்றுவதும் சற்றுக் குறைவென்றே சொல்ல வேண்டும்.
இதன் காரணமாகவோ என்னவோ கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் நான் செல்கின்ற இடங்களுக்கு அன்பர் வேல்பாண்டியை என்னோடு அனுப்பி வைத்தார்.
வேல்பாண்டியின் வேக நடைக்கு என்னால் ஈடு கொடுக்க முடியாமல்போன சந்தர்ப்பங்களும் உண்டு.
எனினும் வேல்பாண்டியின் ஆறுதலான மொழிநடையும் தெளிவான சொல்லாட்சியும் தமிழகத்துத் தமிழை என்னால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
அவரின் வேகநடை காரணமாக புதுச்சேரியில் உள்ள கடைத் தெருக்களை விரைந்து பார்க்கின்ற சந்தர்ப்பமும் கிடைத்ததெனலாம்.
அந்தக் கடைத் தெருவில் உள்ள மருந்துக்கடை ஒன்றுக்குச் சென்றிருந்தோம்.
பூசைக்குப் பொருட் கள், பட்டுத் துணிகள் என ஆலயப் பூசை வழிபாடுகளுக்குத் தேவையான அபிஷேகப் பொருட்கள் என அனைத்தும் ஒருங்கே காணப்பட்டன.
அதைவிட, குறித்த மருந்துக்கடை மிகவும் நேர்த்தியான ஒழுங்குபடுத்தலுடன் காணப் பட்டது.
தவிர, அங்குள்ள திரு நீறு, சந்தனம், குங்குமம் என்பன மிகவும் தரம் வாய்ந்தவையாக இருப்பதை அவதானிக்க முடிந்தது.
அந்தத் தரத்தில் அவற்றை எங்கள் யாழ்ப்பாணத்தில் காண்பது கார்த்திகை மாதத்து மூன்றாம் பிறைக்கு ஒப்பானது.
இதற்கும் மேலாக, பூசைப் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அங்கு விற்பனையாகின்ற பன்னீரின் தரம் கண்டுதிகைத்துப்போனேன். அந்தளவிற்கு பன்னீர் பன்னீராக இருந்தது.
இவை பற்றி இங்கு பிரஸ்தாபிப்பதன் நோக்கம், எங்கள் மருந்துக் கடை உரிமையாளர்களும் தரமான பூசைப் பொருட்களை தருவித்து விற்பனை செய்ய வேண்டும் என்பதே.
இறைவழிபாட்டிற்குப் பயன்படுகின்ற பூசைப் பொருட்கள் தரமானவையாக இருக்கின்ற போது, அங்கு நறுமணம் சூழ்ந்து தெய்வீகத் தன்மை ஏற்படும்.
இது விடயத்தில் நம் மருந்துக்கடை உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவில் யாழ்ப்பாணத்தில் விற்பனையாகின்ற குங்குமம், சந்தனம் போன்ற பிரசாதப் பொருட்களை சில மாதங்களுக்கேனும் வைத்திருக்க முடிவதில்லை.
அவை இலகுவில் பழுதடைந்து போகின்றன.
இது பற்றியும் நம்மவர்கள் கவனம் செலுத்துவது கட்டாயமானது.
தமிழகத்தின் சாயல்
புதுச்சேரி தனி மாநிலமாக இருந்தாலும் தமிழர் தேசம் என்பதாலும் தமிழகம் அதன் எல்லை என்பதாலும் தமிழகத்தின் பண்பாடுகள் புதுச்சேரியிலும் முழுமையாக இளையோடி இருப்பதைக் காண முடியும்.
அதிலும் தமிழகத்தின் அரசியல் கலாசாரம் அப்படியே புதுச்சேரியிலும் பரிணமிக்கின்றன.
ஆம்,தமிழகத்தில் எங்கனம் அரசியல் தலைவர்களின் பதாகைகள் காட்சிப்படுத்தப்படுகின் றனவோ, திருமண விழாக்களிற்கு வருகை தருகின்ற அரசியல் தலைவர்களின் புகைப் படங்கள் அடங்கிய பிரமாண்டமான கட்டவுட்டுகள் பார்வைக்கு வைக்கப்படுகின்ற னவோ, அதுபோல புதுச்சேரி முழுவதிலும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய மிகப் பிரமாண்டமான பதாகைகள் சாலை ஓரங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


