நேற்று நண்பர்கள்;இன்று எதிரிகள்
Share
ஈரான்-இஸ்ரேல் இடையேயான மர்ம ‘ஆயுத ஒப்பந்த’ வரலாறு
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்போதைய மோத லானது, வெறும் இருநாடுகளுக்கு இடையிலான நிலப்பரப்பு அல்லது அதிகாரப் போட்டியாக மட்டும் சுருங்கிவிடவில்லை.
இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களின் அமைதியைக் குலைக்கும் ஒரு மிகப்பெரிய புவி சார் அரசியல் நிகழ்வாக உருவெடுத் துள்ளது.
பல தசாப்தங்களாகத் திரைமறைவில், நிழல் யுத்தமாக நடந்து வந்த இந்தப் பகைமை, தற்போது வெளிப்படையான ஏவுகணைத் தாக்குதல்களாகவும் நேரடி
மோதல்களாகவும் மாறியிருப்பது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நிலவிய பதற்றத்தைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த நிலைமை அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இன்றைய பரம எதிரிகளான ஈரானும் இஸ்ரேலும் ஒரு காலத்தில் நெருங்கிய நண் பர்களாக இருந்தன என்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.
1979 ஆம் ஆண்டுக்கு முன்பு, ஈரானை ஷா மன்னர் ஆட்சி செய்த காலத்தில், இருநாடுகளும் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக ஒத்துழைத்து வந்தன.
இருப்பினும், 1979 இல் நிகழ்ந்த ஈரானியப் புரட்சிக்குப் பிறகு அங்கு அமைந்த மதத் தலைவர்களின் ஆட்சி, இஸ்ரேலைத் தனது முதன்மை எதிரியாக அறிவித்தது.
அங்கிருந்து தொடங்கிய இந்த விரிசல், கடந்த 40 ஆண்டுகளாக லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளின் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி ஈரான் நடத்திய மறை முகப் போராகத் தொடர்ந்தது.
ஆனால், தற்போது அந்த மறை முகத்தன்மை மறைந்து, நாடுகள் நேரடியாக ஒருவரை ஒருவர் தாக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த மோதலின் பின்னணியில் உள்ள ஒரு விசித்திரமான வரலாற்று நிகழ்வு 1980களில் நடந்த ‘ஈரான்-கான்ட்ரா’ விவகாரம் ஆகும். 1979 இல் இஸ்ரேலைச் “சாத்தான்” என்று ஈரான் பகிரங்கமாக அறிவித்த போதிலும், 1980இல் ஈராக் அதிபர் சதாம் உசேன் ஈரானின் மீது போர் தொடுத்தபோது, ஈரான் கடுமையான ஆயுத நெருக்கடியில் சிக்கியது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் போர் விமானங்கள் முடங்கிக் கிடந்த வேளையில், இஸ்ரேல் ஒரு தந்திரமான ராஜதந்திரக் கணக்கைப் போட்டது.
ஈராக் வெற்றி பெறுவது தங்களுக்கு ஆபத்து என்று கருதிய இஸ்ரேல், “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஈரானுக்கு இரகசியமாக ஆயுதங்
களை வழங்கியது.
‘ஆப்பரேஷன் சீஷெல்’ என்ற பெயரில் நடந்த இந்த இரகசிய ஒப்பந்தத்தின் மூலம் ஈரானியப் புரட்சிக் காவல்படை இஸ்ரேலிய ஏவுகணைகளைப் பெற்றுக்
கொண்டது.
இந்த வரலாற்று நிகழ்வு, சர்வதேச அரசியலில் நிரந் தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
தற்போதைய சூழலில், இந்த மோதலின் மிக முக்கியமான தாக்கம் உலக எரிசக்தி சந்தையில் எதிரொலிக்கிறது.
உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு “ஹார்முஸ் ஜலசந்தி” வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது.
ஈரான் மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்தக் குறுகிய கடல் வழிப்பாதை, உலகின் மிக முக்கி யமான “எரிசக்தி நெரிசல் புள்ளி என்று அழைக்கப்படுகிறது.
இப்பகுதியில் போர் மூளும் போது, இந்தப் பாதையில் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது, இது 1980களின் “டேங்கர் போரை” நினைவுபடுத்துகிறது.
இதன் விளைவாக, 2026 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு பேரல் எண்ணெயின் விலை 70 டொலரிலிருந்து 110 டொலராக உயர்ந்துள்ளது,
போர் காரணமாக வர்த்தகப் பாதைகள் மூடப்பட்டதால், மார்ச் 2026இல் ஈரான் தனது உணவு ஏற்றுமதியை நிறுத்தியது. ஒரு பிராந்தியத்தில் நடக்கும் போர், கடல் எல்லையே இல்லாத நாடுகளின் சமையலறை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.
ஈரான் – இஸ்ரேல் மோதல் என்பது ஒரு குளத்தில் வீசப்பட்ட கல்லைப் போன்றது,
அதன் அலைகள் தூரத்தில் இருக்கும் நாடுகளையும் விடாமல் துரத்துகின்றன.
2026ஆம் ஆண்டில் நாம் காண்பது ஒரு சங்கிலித் தொடர் விளைவைத்தான்.
சிரியா, லெபனான் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் இந்தப் போரின் நிஜமான போர்க்களங்களாக மாறியுள்ளன.
இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்காகச் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவதால், அந்த நாடுகளில் அமைதி குலைந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் அவலம் நேரிடுகிறது.
அதே சமயம், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பெரும் செல்வச் செழிப்பு மிக்க நாடுகள், தங்களின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மற்றும் நவீனக் கட்டிடங்கள் மீதான தாக்குதல்களுக்கு அஞ்சி பாதுகாப்புப் பதற்றத்திலேயே வாழ வேண்டியுள்ளது.
பஹ்ரைன், கட்டார் மற்றும் குவைத் போன்ற நாடுகளும் தங்களின் மூலோபாய இருப்பிடம் மற்றும் எரிசக்தி உற்பத்தியால் இந்தப் பதற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன.
பொருளாதாரப் பாதிப்புகளைத்தாண்டி, இந்த மோதல் சமூக மற்றும் மத ரீதியான கொந்தளிப்புகளையும் ஏற்படுத்துகிறது.
ஈரானின் முக்கியத் தலைவர்கள் கொல்லப்படும் நிகழ்வுகள், ஈராக் முதல் தஜிகிஸ்தான் வரை உள்ள மக்களிடையே உணர்ச்சிப்பூர்வமான பாதிப்புகளை உண்டாக்கி, அந்த நாட்டு அரசாங்கங்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்துகின்றன.
இது வெளிநாட்டு முதலீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்து, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் முன்னேற்றத்தையும் தடை செய்கிறது.
எரிசக்தி விலை உயர்வு, வர்த்தகத் தடைகள், அகதிகள் பிரச்சினை மற்றும் அரசியல் குழப்பங்கள் என இந்தப் போர் உலகளாவிய பணவீக்கத்திற்கும் தட்டுப்பாட்டிற்கும் வழிவகுத்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் நிலையான வளர்ச்சி என்பது இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் சமாதானத்தில் தான் அடங்கியுள்ளது என்பதைத் தற்போதைய சூழல் நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.


