எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் : ஈரான் இராணுவம் எச்சரிக்கை!
Share
மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு ஈரான் ஆயுதப் படைகளின் கைகளிலேயே உள்ளது எனவும், அங்கு நுழைய முயலும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் இராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க கடற்படை ஒரு விசேடப் பணியை ஆரம்பிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரான் இராணுவம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை எங்களது முழு வலிமையுடன் நாங்கள் நிர்வகிப்போம். எங்களது ஆயுதப் படைகளின் ஒருங்கிணைப்பு இன்றி எந்தவொரு வணிகக் கப்பலோ அல்லது எண்ணெய் டேங்கர்களோ இந்தப் பகுதியை கடக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். மீறினால் அத்தகைய கப்பல்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் பொறுப்பல்ல.
மேலும், “அத்துமீறும் அமெரிக்க இராணுவம் உட்பட எந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழைய முயன்றால், அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்,” என்வும் ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


