தரிசனம்
Share
யாழ்.போதனா வைத்தியசாலை 2
யாழ்.போதனா வைத்தியசாலை என்பது தனித்து ஓரிருவரில் தங்கியுள்ள அமைப்பன்று. மாறாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தொடக்கம் மருத்துவ நிபுணர்கள், ஏனைய மருத்துவர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், இதர பணியாளர்கள், நிர்வாகத் தரப்புகள் என அனைவரதும் ஒத்துழைப்புடன் இயங்குகின்ற அமைப்பு.
எனவே அனைவரதும் பரிபூரணமான ஒத்துழைப்புக் கிடைக்கும் போது தான் யாழ்.போதனா வைத்தியசாலையால் உன்னதமான பணியை வழங்க முடியும்.
இருந்தும் சதா நோயாளர்களின் துயரங்களைக் காண்பதனாலோ என்னவோ பொதுவில் வைத்தியசாலைப் பணியாளர்களில் கணிசமானவர்கள் பக்குவமாகக் கதைக்கின்ற நிலைமையில் இருந்து விலகியுள்ளனர் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.
ஆம், யாழ்.போதனா வைத்தியசாலையின் கட்டுமானங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவரவர் தத்தம் சிகிச்சை நிலையங்களைக் கண்டறிவதென்பது கூட கடினமான காரியமே.
சிகிச்சைப் பிரிவுகள் தொடர்பான அடையாளப்படுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அது பற்றிக் கவனம் செலுத்தாமல், வைத்தியசாலைப் பணியாளர்களிடம் வினவுகின்ற நிலைமை இருக்கவே செய்கிறது.
இங்குதான் சம்பந்தப்பட்டவர்களை ஆற்றுப்படுத்துகின்ற பெரும் பொறுப்பு வைத்தியசாலையின் அத்தனை பணியாளர்களுக்கும் உரியதாகின்றது.
என்ன செய்வது வாழ்க்கையில் ஒரு முறையேனும் வைத்தியசாலைக்கு வராதவர்கள் இலட்சக்கணக்கில் உளர். இத்தகையவர்கள் முதற் தடவையாக வைத்தியசாலையின் நுழைவாயிலில் கால்வைக்கும் போது, அவர்களிடம் இருக்கக்கூடிய பதற்றமும் இனம் புரியாத திகைப்பும் நியாயமானதே.
இங்கு தான் நிலைமையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய வழிப்படுத்தல்களைச் செய்து அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது.
இவ்விடத்தில் பணியாளர்கள் எவரும் வெறுப்போ-கடுப்போ அடைய வேண்டிய தேவையில்லை.
ஆனாலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றக் கூடியவர்களில் கணிசமானவர்கள் வெறுப்போடும் விரக்தியோடும் மனச்சலிப்போடும் கூடிய மனநிலையில் வேலை செய்வதைக்காண முடியும்.
இவ்வாறான நிலைமை அவர்களின் சொந்த இயல்பா? அல்லது வீட்டுச் சூழலா? அன்றி அவர்களின் மேல்மட்ட முகாமைகள் கொடுக்கும் அழுத்தமா? என்பது தெரிய வில்லை.
எது எவ்வாறாயினும் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஒவ்வொரு பணியாளர்களும் அரச நியமனம் பெற்றவர்கள். அரச வேதனத்தைப் பெற்றுக் கொள்பவர்கள்.
எனவே சொந்த குணவியல்புகளினின்று விலகி, பொது நிலையில் நின்று, வைத்திய சாலைக்கு வருகின்ற நோயாளர்கள்-நோயாளர்களை அழைத்து வருபவர்கள்-பார்வையாளர்கள் மற்றும் இதர பணி யாளர்களுடன் இன்முகத்துடன் பழகுகின்ற-கதைக்கின்ற உயர்ந்த பண்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதை நாம் கூறும் போது சிரித்த முகத்துடன்-இனியன பேசுகின்ற மிக உன்னத மான வர்களும் வைத்தியசாலையின் அத்தனை பதவி நிலைகளிலும் இருக்கின்றனர் என்ற உண்மையையும் நாம் மறந்து விட முடியாது.
தனியார் வைத்தியசாலைகள்
இப்போது யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிறைந்து வழிவதைக்காண முடிகிறது.
அதிலும் மாலை வேளைகளில், கும்பமேளாவில் நடை பெறும் மகாமக உற்சவம் போல நோயாளர்கள் குவிகின்றனர்.
இவற்றைப்பார்க்கும் போது அரச வைத்தியசாலைகள் தோல்வி கண்டு விட்டனவா என்று எண்ணத் தோன்றும்.
ஆம் பிரதேச, மாவட்ட, பிராந்திய, போதனா வைத்திய சாலைகள் நம் மண்ணில் இய ங்குகின்ற போதிலும் ஏகப்பட்ட பணச்செலவைக் கொண்ட தனியார் வைத்தியசாலைகளை மக்கள் நாடுகின்ற நிலைமைக்குக் காரணம் என்ன என்று ஆராய்வது கட்டாயமானது.
இங்குதான் ஓர் உண்மையை கூறியாக வேண்டும்.
அதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்திய நிபுணர்களே யாழ்.மாவட்டத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலைகளிலும் வைத்திய நிபுணர்களாகக் கடமையாற்றுகின்றனர்.
ஆக, குறித்த மருத்துவ நிபுணர்களின் சேவையை யாழ்.போதனா வைத்திய சாலையில் பெற்றுக்கொள்வது கடினம் என்ற நிலையில், தனியார் வைத்தியசாலைகளை நாடுகின்ற தேவை ஏற்படுகின்றது.
இதையும் கடந்து இன்னுமோர் உண்மையை நாம் கூறியாக வேண்டும். அதாவது, நாட்டின் தலைநகர் உள்ளிட்ட நகரங்களில் தனியார் வைத்தியசாலைகள் என்பன பிரபல தொழிலதிபர்களின்-முதலீட்டாளர்களின் சொத்தாக இருக்க, யாழ். மாவட்டத்திலுள்ள பிரபல தனியார் வைத்திய சாலைகள் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்திய நிபுணர்கள் சிலரின் அல்லது மருத்துவர்கள் சிலரின் சொந்தச் சொத்தாக இருக்கின்றன.
உண்மையில் இது யாழ்ப்பாண மக்களின் துரதிஷ்டம் என்றே கூற வேண்டும்.
எதுவாயினும் மருத்துவ நிபுணர்கள் பலர் தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்லாமல், தங்களின் முழு நேரத்தையும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகி ன்ற நோயாளர்களுடன் செலவிடுகின்ற பெருந்தன்மையையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டும்.
தவிர, இன்னும் சில மருத்துவ நிபுணர்கள் தனியார் வைத்தியசாலைகளில் தாம் பார்வையிடும் நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளனர்.
இங்கு தனியார் வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஊக்குவிப்பதாக; யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் உள்ளன என்பதை இங்கு தெரியப்படுத்துவது கட்டாயமானது.
தொடரும்…


