3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் விமான நிலையத்தில் கைது
Share
3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த 13 வெளிநாட்டு விமானப் பயணிகள், இன்று (18) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சீன நாட்டு வர்த்தகர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் இன்று (18) அதிகாலை 04.00 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, மலேசிய ஏர்லைன்ஸின் MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகள் மற்றும் தேயிலை அடங்கிய பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட 212,600 சிகரெட்டுகளைக் கொண்ட 1,063 சிகரெட் கார்டன்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த குழுவினரைத் தடுத்து வைத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


