வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு – 4300 பேர் காயம்
Share
வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தலைநகர் கராகசுக்கு மேற்கே, 160 கி.மீ., தொலைவில் உள்ள மொரோன் கடற்கரை பகுதிக்கு அருகில், 39 வினாடி இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவுக்கு, தரையில் இருந்து 26 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவுக்கு, 10 கி.மீ., ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரட்டை நிலநடுக்கத்தால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நுாற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு பிளந்துள்ளன.
தலைநகர் கராகசை ஒட்டியுள்ள லா குவைரா பகுதி மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதால், அது, ‘பேரிடர் மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் அதிகளவிலான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.கராகசின் அல்டமிரா பகுதியில், 22 மாடிகளை கொண்ட பெரிய கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது.
நிலநடுக்கங்களால் இதுவரை 235 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வெனிசுலாவின் முதன்மையான விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்ததையடுத்து மூடப்பட்டுள்ளது.


