Type to search

Headlines Local News News

பேருந்தின் சில்லில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்

Share

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில்  சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில்  உயிரிழந்துள்ளார். 

பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார்.

அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பேருந்தின் சக்கரம் ஏறியுள்ளது. 

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், திருமணம் முடித்து வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் என்றும் பொலிஸார்  தெரிவித்தனர்.

குழாய் நீர் அகழும் வேலைத்திட்டத்திற்காகத் தன் குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அவர் வருகை தந்திருந்தபோதே இந்த துயரம் நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link