நாளை சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவப் பீடம் திறப்பு!
Share
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், நாளை (04) மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்படும் என அந்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி உட்படப் பல முக்கிய விருந்தினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகப் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் சவுதி அரேபிய அரசாங்கங்களின் கூட்டு நிதிப் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவப் பீடமானது இரத்தினபுரி புதிய நகரை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது.
20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவப் பீடத்தில், நடப்பு வருடத்திற்காக 162 மருத்துவ மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது இங்கு சுமார் 750 மருத்துவ மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பீடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,096 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளதுடன், சவுதி அரேபிய அரசு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது.
இந்த மருத்துவப் பீட வளாகமானது ஒரே நேரத்தில் 500 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடிய விடுதிக்கட்டிடத்தையும், 1,060 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய திறன் கொண்ட பிரம்மாண்ட மண்டபம் ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது.


