இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் உபகரணங்களை வழங்கியது இந்தியா!
Share
இந்திய அரசாங்கத்தினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தின் இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள இந்த இராணுவ உபகரணத் தொகுதி மற்றும் அவசர விபத்து மற்றும் அதிர்ச்சி சிகிச்சை முறையை , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயியகொன்தவிடம் (ஓய்வுபெற்ற) உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Sharda’ கப்பல் கடந்த ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை செயல்பாட்டுத் தேவைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தது. இந்த விஜயத்தின் போது, ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினருக்கு, இந்திய இராணுவத்திடமிருந்து கிடைத்த உபகரணத் தொகுதியும் இக்கப்பல் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


