இலங்கையில் கைதான 156 வெளிநாட்டு மோசடியாளர்கள்: அதிரடியாக நாடுகடத்த முடிவு!
Share
இலங்கையில் தங்கியிருந்து சர்வதேச ரீதியாக இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 156 வெளிநாட்டவர்கள் சட்ட நடவடிக்கைகளின் பின்னர் அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (03) சிலாபம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இந்த 156 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு எடுத்த இந்த கும்பல், அங்கிருந்து ஏராளமான கணினிகள் மற்றும் நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால,
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையர்களை விடவும், தத்தமது சொந்த நாட்டு மக்களையும் அவர்களின் நிதி ஆதாரங்களையுமே இலக்கு வைத்துள்ளனர்.
சீனா, தாய்வான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குகின்றனர். இவர்களைத் தத்தமது நாடுகளுக்கு நாடுகடத்துமாறு அந்தந்த நாடுகளின் அரசாங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இவ்வாறான தேடுதல் வேட்டைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை சர்வதேச சைபர் குற்றங்களின் மையமாக மாறுவது தடுக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.


