அமெரிக்காவில் 3 ஆண்டுகளில் 10 விஞ்ஞானிகள் மாயம்
Share
அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் என, 10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று, கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் மிக முக்கியமான விண்வெளி மற்றும் அணுசக்தி தொடர்பான இரகசிய திட்டங்களில் பணியாற்றிய விஞ்ஞானிகள், மர்மமான முறையில் காணாமல் போனதாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் கூறியிருந்தது.
காணாமல் போனவர்கள், அணு ஆயுதங்கள் உருவாக்கம் தொடர்பான, லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகம் மற்றும் நாசாவின் மேம்பட்ட ஏவுகணை தொழில்நுட்ப ஆய்வகம், எதிர்கால எரிசக்தி தொழில்நுட்பம் தொடர்பான எம்.ஐ.டி, அறிவியல் மையம் போன்ற உயர் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றியவர்கள்.
பலர் வீட்டிலிருந்து நடந்து சென்ற போது காணாமல் போயுள்ளனர். அவர்களின் மொபைல்போன், பர்ஸ், சாவி போன்றவை வீட்டிலேயே இருந்துள்ளன. இது போன்ற சம்பவங்கள் 2023 முதல் தொடர்ந்து நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த வரிசையில், கடந்த பெப்ரவரியில், ஓய்வுபெற்ற அமெரிக்க விமானப்படை ஜெனரல் வில்லியம் நீல் மெக்காஸ்லேண்ட் காணாமல் போயுள்ளார்.
மர்மமான முறையில் விஞ்ஞானிகள் காணாமல் போவது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.


