சிறுவர் இல்லங்களில் இருந்து வெளியேறும் இளைஞர்களுக்கு வீட்டுத் திட்டம்!
Share
சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும், சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின்போது, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் கள மட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தார்.
குறிப்பாக, சிறுவர் பராமரிப்பு தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகளின் போதாமை அதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.
போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கென பிரத்தியேக புனர்வாழ்வு மையம் வடக்கு மாகாணத்தில் இல்லாமையால், அவர்களை சான்று பெற்ற பாடசாலைகளில் இணைக்கும்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உளநலத் தேவைப்பாடுடைய சிறுவர்களைப் பராமரிப்பதற்கென அரச சிறுவர் இல்லங்கள் இன்மையால் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
கைவிடப்பட்ட சிறுவர்களை அரவணைத்து வளர்த்தெடுக்கும் இப்பணியானது வெறும் தொழில் அல்ல, அது ஒரு மாபெரும் சமூகச் சேவை என்ற உணர்வோடு முன்னெடுக்கப்பட வேண்டும்.
சட்ட ரீதியான திருத்தங்கள் தேவைப்படும் விடயங்கள் தொடர்பில் 9 மாகாணங்களும் ஒன்றிணைந்து ஆவண ரீதியாக முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேவேளை, வடக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் போதியளவு வழங்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் இவர்களுக்கும் அத்தகைய பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும்.
சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாவல் திணைக்களத்தின் புள்ளிவிபரக் கையேடும், திணைக்களத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரால் முதன்முறையாக தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட ‘நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான கையேடும்’ அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டன.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


