இன நல்லிணக்கத்தின் தொடக்கப்புள்ளி…
Share
நாம் அனைவரும் இலங்கையர்கள் என, வார்த்தைக்கு முந்நூறு தரம் பேசும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் அதை நூறு விகிதம் கடைப்பிடிக்கின்றனரா எனின் அது கேள்விக்குறியே?
சிறுபான்மையினர் எனின் அவர்கள் அடங்கிப் போபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு மோசமானது என்பது ஏனோ அவர்களுக்குப் புரியவில்லை.
இந்த நாடு பெரும்பான்மைச் சிங்களவர்களுக்கேயுரியது எனும் எண்ணம் அவர்களின் மனங்களில் சாக்கடையாய் நிறைந்திருக்கின்றது.
இதன் வெளிப்பாடு சிறுபான்மையினரை இகழ்வதாயும் அவர்களை ஒரு பொருட்டாகக்கூடக் கருதாத நிலையும் வந்துவிட்டது.
இந்த வெளிப்பாடே இலங்கையில் போர் தோன்றக் காரணம் என்பதை இன்னும் அவர்கள் ஏற்கத்தயாரில்லை.
முதலில் சிறுபான்மையினர் உணவு உண்பதற்கு மட்டும் வாயைத் திறந்தால் போதும் என்ற எண்ணத்தை அவர்கள் கைவிட வேண்டும்.
தமிழ் இளைஞன் ஒருத்தன் தனது இனம் பட்டபாட்டையும் அவர்கள் கடந்து வந்த வலியையும் பாடினான் என்பதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடே கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தது இதன் வெளிப்பாடே.
தமிழினத்தையும் அவர்களின் போராட்டங்களையும் இகழ்தல் என்பதில், மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் நடைபெற்றபோது அங்குகூடிய பெரும்பான்மை இளைஞர்கள் தமிழினத்தின் போராட்டத்தைப் பற்றி கொச்சை வார்த்தைகள் பேசியதுடன் சைகைகளையும் செய்து அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொண்டனர்.
இவர்கள் மீது பாதுகாப்புத் தரப்பினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
தவிர செம்மணிப் புதைகுழி விவகாரம் உலகையே
உலுக்கும் வகையில், தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
உடல்கள் பிணைக்கப்பட்ட நிலையில், அருகருகே கால்கள் மடிக்கப்பட்ட நிலையில், தலை திருப்பப்பட்ட நிலையில் இவ்வாறு நெஞ்சை உலுக்கும் வகையில் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டிக்கின்றன.
கொடுமை இந்த எலும்புக் கூடுகளில் பல சிறுவர்களுடையது என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. இந்த நிலையில் செம்மணிப் புதைகுழியில் அடையாளம் காணப்படுகின்ற எலும்புக்கூடுகள் நாய்களின் எலும்புக்கூடுகள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பெரும்பான்மை சகோதரர்கள் செம்மணிப்புதைகுழி தொடர்பான விடயங்களை மிக மோசமாக இழிவுபடுத்தி, திரிவுபடுத்திப் பதிவிடுவது இனவாத சிந்தனையின் உச்சம் என்றே கூறலாம்.
இங்குதான் நாம் ஒரு விடயத்தைப் பிரித்தறிய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஆம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து அரசாங்க புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தனக்கு எதிராக வழக்கு புனையப்பட்டிருப்பதாகவும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் கூறி அவர் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு ஆதரவாகவும் அவரை உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் இறந்திருக்கும் நிலையில் அதனுடன் தொடர்புடைய ஒருவரைக் காப்பாற்றுவதற்குத் துடிப்பவர்கள் எவ்வாறு தமிழினத்துக்கான நீதியைத் தருவார்கள் என்பதையும் இங்கு நாம் கருத்தாளத்துடன் பார்க்க வேண்டும்.
குறித்த போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியிருந்தனர்.
தாயக தேசியப் பாடலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக சங்கீத்தனைக் கைது செய்தவர்களின் கண்களில் இந்தக் காணொளி தென்படாதது ஏன் என்ற கேள்வியையும் இங்கு கேட்டாக வேண்டும்.
நிலை இவ்வாறு இருக்கையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இனவாதம் பேசுவதில் விசேட தேர்ச்சி பெற்றவருமான சரத் வீரசேகர வடக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கினால் இந்த நாடு ஒற்றை ஆட்சியை இழக்க நேரிடும் எனப் பேசியிருக்கிறார்.
அதாவது தமிழருக்கு மாகாண சபையின் அதிஉயர் அதிகாரமான காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் அதனூடாக மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர்ப் பெற்று விடுவார்கள், தமிழீழம் மலரும் என்பதே அவரின் பேச்சின் உள்நோக்கம்.
அவ்வாறெனின் தமிழினத்திற்கு எந்த அதிகாரங்களையும், சுதந்திரத்தையும் வழங்கக்கூடாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருப்பதுடன் தனது பேச்சினால் சிங்கள மக்களை உசுப்பேற்றி விடும் கைங்கரியத்தை சிறப்பாக செயற்படுத்தி வருகிறார்.
தமிழினத்துக்கு அதிகாரங்களை வழங்கக்கூடாது எனும் சித்தாந்தத்தை முதலில் பெரும்பான்மையினர் கைவிட வேண்டும்.
அத்துடன் தமிழினத்தின் பேச்சு, எழுத்து, ஒன்றுகூடும், நினைவு கூரும் உரிமைகளைத் தட்டிப்பறிக்கும் எண்ணத்தை அவர்களின் மனங்களிலிருந்து அழிக்க வேண்டும்.
தமிழினம் ஏன் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தது என்பதை சிந்திக்க மறந்து தமிழினத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கங்களும் பெரும்பான்மையினரும் முன்வர வேண்டும்.
இவற்றைச் செய்யாமல் இந்த நாட்டில் இனநல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியாது.
அபிமன்யு.


