கறுவா ஏற்றுமதி வருமானத்தை $300 மில்லியனாக உயர்த்த இலங்கை புதிய திட்டம்!
Share
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அவர்களுக்கும் கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (10) விவசாய அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது, கறுவா அபிவிருத்தி திணைக்களத்தினால் தங்களின் எதிர்கால திட்டங்கள் அடங்கிய வழிகாட்டி வரைபடம் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்போது உலகளவில் இலங்கை கறுவாவிற்கு மிகப்பெரிய தேவை நிலவி வருகிறது. உலக சந்தையிலுள்ள உண்மையான கறுவாவில்80 வீதத்தை இலங்கையே உற்பத்தி செய்கிறது.
தற்போது கறுவா ஏற்றுமதி மூலம் இலங்கை ஆண்டுதோறும் 260 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி வருவதுடன், எதிர்காலத்தில் இந்த இலக்கை 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்த்துவதே கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் நோக்கமாகும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
திணைக்களத்தின் தரவுகளின்படி, தற்போது ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து 250 கிலோகிராம் கறுவா அறுவடை பெறப்படுகிறது. இதனை 400 கிலோகிராம் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலின் போது கறுவா கைத்தொழிலில் நிலவும் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது:
- ‘கசியா’ எனப்படும் போலி கறுவாவினால் ஏற்படும் சந்தைப்போட்டி.
- குறைந்த விலை கொண்ட சந்தைகளை மட்டுமே நம்பியிருத்தல்.
- ஒருசில ஏற்றுமதியாளர்களுக்குள் மாத்திரம் முடக்கப்பட்டுள்ள சந்தை ஏகபோகம்.
- மட்டுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திகள்.
- பலவீனமான வர்த்தக முத்திரை
கறுவா பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதற்கு சந்தையை விரிவாக்கல், புதிய சந்தைகளுக்குள் ஊடுருவல், மதிப்பு கூட்டப்பட்ட (Value-added) இலங்கை கறுவா தயாரிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டு பயிர்ச்செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் “தேசிய கறுவா கைத்தொழில் மற்றும் கலாசார ஊக்குவிப்பு மையம்” குறித்தும் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், கறுவாவை ஒரு இடைப்பயிராக (Intercrop) பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.


