வான்பாயும் 16 பிரதான நீர்த்தேக்கங்கள்
Share
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
இவ்வாறு பெருக்கெடுக்கும் பிரதான நீர்த்தேக்கங்களில் அநுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, பதுளை மாவட்டத்தின் அம்பேவெல, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மௌ-ஆர, லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோதவாவி மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்கள் உள்ளடங்குகின்றன.
மேலும், குருநாகல் மாவட்டத்தின் அம்பகொலவாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களும், கண்டி மாவட்டத்தின் நாலந்த மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்களும், மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டஹார நீர்த்தேக்கமும், மன்னார் மாவட்டத்தின் யோதவாவியும் தற்போது பெருக்கெடுத்து வருகின்றன.
குறிப்பாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 14,000 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 4,100 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கும், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கையினுக்கும் விடுவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


