யாழ். அல்லைப்பிட்டியில் தனியார் காணியில் என்பு சிதிலங்கள் மீட்பு!
Share
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து மனித என்புச் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (14) தனது காணியைப் பார்வையிடச் சென்ற உரிமையாளர் இது குறித்து வழங்கிய தகவலின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உள்ள மரத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதுடன், உடலை மிருகங்கள் கடித்துச் சிதைத்திருக்கலாம் என்பதால் என்புகள் சிதறிக் காணப்படுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அங்கிருந்த மரக்கிளையில் இளஞ்சிவப்பு நிற ரீஷேர்ட் ஒன்றும், தரையில் கிழிந்த நிலையில் கறுப்பு நிறக் காற்சட்டையும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், மரத்தில் இருந்த பையொன்றில் ஜனவரி 11ஆம் திகதி வெளியான பத்திரிகையால் சுற்றப்பட்ட நிலையில் மூன்று மதுபானப் போத்தல்கள் காணப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் அண்மைய நாட்களில் எவரும் காணாமல் போனதாக முறைப்பாடுகள் எதுவும் பதியப்படாத நிலையில், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


