முல்லைத்தீவு விவசாயிகளின் நீண்டகாலக் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு!
Share
விவசாய, கால்நடைச் செல்வங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வாரி மகிம அபே உறுமய’ (நீர்ப்பாசன பெருமை எமது மரபுரிமை) தேசிய திட்டத்தின்கீழ், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று கிராமத்தில் அமைந்துள்ள நீராவ் ஊற்றுக்குளம் குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
விவசாய, கால்நடைச் செல்வங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், ‘வாரி மகிம அபே உறுமய’ தேசிய திட்டத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் சந்தன எதிரிசூரிய உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தண்ணீரூற்றுப் பகுதியில் உள்ள சுமார் 400 ஏக்கர் வயல் நிலங்கள் தற்போது வானம் பார்த்த பூமியாக (மழைநீரை நம்பி) பயிரிடப்பட்டு வரும் நிலையில், இக்குளம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் இந்த நெல்வடிநிலப் பரப்பை 600 ஏக்கருக்கும் அதிகமாக விரிவுபடுத்திக்கொள்ள முடியும். அத்துடன், இக்குளம் உருவாக்கப்படுவதன் மூலம் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.


