போதைப்பொருள் கடத்திய 22 பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Share
தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 22 பிக்குகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்குகள் கடந்த 25ஆம் திகதி தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ‘அமிதானந்த’ எனப்படும் பிக்கு ஒருவரே இந்த சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. அதற்கமைய, அந்தப் பிக்கு கம்பஹா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இவரது வழிநடத்தலில் இதற்கு முன்னரும் ஒரு தடவை போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் கடத்தல் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபர் அதுருகிரிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அவர் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர உத்தரவிட்டார்.


