Type to search

Headlines Local News News

தற்கொலை வீதம் குறைப்பில் இலங்கை சாதனை!

Share

இலங்கையில் அதிவிஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகள் படிப்படியாகத் தடை செய்யப்பட்டதன் காரணமாக, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சுமார் 70 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 79ஆவது உலக சுகாதார மாநாட்டிற்கு சமாந்தரமாக, “பூச்சிக்கொல்லிகள் மூலம் தற்கொலைகளைத் தடுத்தல்” எனும் தலைப்பிலான விசேட அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

1990ஆம் ஆண்டு முதல் அதிவிஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

குறைந்த செலவில் குறுகிய காலத்திற்குள் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலையீடாக இது அமைகின்றது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

மேலும், தற்கொலைகளைத் தடுக்கும் தேசிய உத்திகளில் பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவதை அனைத்து நாடுகளும் கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் என அவர் முன்மொழிந்தார். 

இருப்பினும், தற்கொலைகளைத் தடுப்பதற்கு பூச்சிக்கொல்லிகளைக் கட்டுப்படுத்துவது மாத்திரம் போதுமானதல்ல என்றும், அதற்காக சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த அவர், இலங்கையில் தற்போது ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதன் மூலம் அது முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கையில் 1995ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் பேருக்கு 47 ஆக இருந்த தற்கொலை வீதம், 2022ஆம் ஆண்டளவில் 14 ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த அமர்வை இலங்கை, கயானா, கென்யா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 

அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச தற்கொலைத் தடுப்புச் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்பும் இதற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link