தண்டவாள பாகங்கள் 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளமை அம்பலம்
Share
வனவாசல ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில் கழற்றப்பட்ட தண்டவாளப் பாகங்கள் 3,000 ரூபாய் பணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்த இடம் அடையாளம் காணப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண வட பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக, ரயில் தண்டவாளத்தின் ஆணைகளைக் கழற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே, பொருட்களைக் கொள்வனவு செய்த நபரைக் கைது செய்ய முடிந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
ரயில் தண்டவாளப் பாகங்களைக் கழற்றிய நபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், அவர் 25 வயதுடைய ஒரு இளைஞர் எனவும் காலிங்க ஜயசிங்க தெரிவித்தார்.
வனவாசல பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்து குறித்துத் தெளிவுபடுத்துவதற்காக இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


