சீரற்ற வானிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்!
Share
நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இந்த அனர்த்த நிலைமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பகுதியளவில் சேதமடைந்த வீடுகளில் அதிகளவான வீடுகள் களுத்துறை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த வீடுகளின் எண்ணிக்கை 78 ஆகும்.
இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 12 வீடுகளும், காலி மாவட்டத்தில் 6 வீடுகளும், கொழும்பு மாவட்டத்தில் 5 வீடுகளும், மொனராகலை மாவட்டத்தில் 4 வீடுகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 வீடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 3 வீடுகளும், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் தலா 2 வீடுகளும் இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நிலவி வரும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4,099 ஆகும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 48 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,263 குடும்பங்களைச் சேர்ந்த 4,099 நபர்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


