கடும் மழையை பொருட்படுத்தாத தொழிலாளர்களுக்கு எதிர்பாராத குளவித் தாக்குதல்!
Share
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் மழையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, தேயிலைச் செடியின் அடியிலிருந்த குளவிக்கூடு கலைந்து வந்து தங்களைத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல்நிலை குறித்து தற்போது அச்சமடையத் தேவையில்லை என வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


