அதிக விலைக்கு அரிசி விற்ற பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு ரூ. 5 லட்சம் அபராதம்!
Share
இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (கீரி பொன்னி) அரிசியை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த முல்லேரியா பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (18) 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) கொழும்பு மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கிலோ அரிசி, அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) 30 ரூபாய் அதிகமாக வைத்து விற்கப்பட்டமை தெரியவந்தது.
நீதிமன்றத்தில் இந்த குற்றச்சாட்டை சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதவானால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை இதன்போது நினைவூட்டியுள்ளது. பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை சரிபார்க்குமாறும், ரசீதுகளை கேட்டுப் பெறுமாறும் கேட்டுக்கொண்டுள்ள சபை, விலை மோசடிகள் குறித்து 1977 என்ற ஹாட்லைன் இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் கோரியுள்ளது.


