பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் 5 வகை உணவுகளுக்கு தடை!
Share
சுகாதாரமான பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பான புதிய வழிகாட்டி இன்று (22) வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மொனிகா விஜேரத்ன இதுகுறித்து தெரிவிக்கையில்; சுகாதார அமைச்சரின் தலைமையில், கொழும்பு மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த வழிகாட்டியானது கல்வி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்குள் இதன் உள்ளடக்கங்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான அதிகாரங்கள் அதிபர்களுக்கும் பாடசாலை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய வழிகாட்டியின்படி, பின்வரும் 5 பிரதான பிரிவுகளின் கீழான உணவுகளை பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது:
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அடங்கிய உணவுகள்.
- அதிக உப்பு மற்றும் செயற்கை சுவையூட்டிகள் அடங்கிய உணவுகள்.
- அதிக சர்க்கரை கொண்ட உணவுகள்.
- ஊட்டச்சத்து குறைவான, அதிக கலோரி கொண்ட உணவுகள்.
- கார்பனேற்றப்பட்ட பானங்கள் (மென்பானங்கள்).
பாடசாலை மாணவர்களிடையே அதிக உடல் பருமன் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும், 13 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் 17.4% சதவீதமானோர் கார்பனேற்றப்பட்ட பானங்களை (மென்பானங்கள்) உட்கொள்வதே இதற்கு முக்கிய காரணம் என்றும் விசேட வைத்திய நிபுணர் மொனிகா விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.


