சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டவர்கள் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Share
2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 628 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி (ASP) எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தியா, வியட்நாம், சீனா, மியன்மார், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கறுவாத்தோட்டம், கல்கிஸ்சை, பொத்தல, சிலாபம் மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் குடிவரவு சட்டங்களை மீறியமை மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக அறைகளைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத செயல்களை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு வீடுகள் அல்லது அலுவலகங்களை வாடகைக்கு வழங்கும் போது, அது குறித்த விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத செயல்களுக்கு இடமளிக்கும் சொத்து உரிமையாளர்களும் அந்த குற்றங்களுக்கு உடந்தையாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.எஸ்.பி வுட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


