கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்தவே முடியாதா!
Share
கட்டாக்காலி நாய்களின் தொல்லை தாங்க முடியாதென்றாயிற்று.
வீதிகள், சந்திகள், சந்தைகள் என எங்கு பார்த்தாலும் கட்டாக்காலி நாய்கள் மயமாக உள்ளன.
இவ்வாறு தெருநாய்களின் தொல்லையால் நாள்தோறும் விபத்துக்குள்ளாகின்ற வர்களின் எண்ணிக்கை பற்றி எவரும் கவனம் செலுத்துவதில்லை.
ஒருமுறை யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் த.பேரானந்த ராஜா அவர்கள் தெரிவித்த தகவலில்; தெரு நாய்களால் ஏற்படுகின்ற விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலையில் பலர் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேவேளை தெருநாய்க் கடிக்கு இலக்கானவர்களுக்கு ஏ.ஆர்.வி மருந்து ஏற்றுவ தற்காக பல இலட்சம் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.
தவிர, வீதிக்கு குறுக்காகத் தெருநாய்கள் ஓடுவதால் ஏற்படும் விபத்துக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தத்தம் தொழில் முயற்சிகளை இழக்கின்ற அதேவேளை ஆறு மாதம், ஒரு வருடம் என எழுந்து நடமாட முடியாத பரிதாப நிலைக்கும் ஆளாகின்றனர் எனத் தெரிவித்திருந்தார்.
மருத்துவ நிபுணர் தெரிவித்த மேற்போந்த கருத்து ஊடகங்களில் வெளிவந்திருந்தன. எனினும் தெருநாய்களைக் கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகள் எதனையும் உள்ளூராட்சி அமைப்புகள் இதுவரை மேற்கொள்ளவில்லை.
இங்குதான் எங்கள் தமிழினத்தின் நிர்வாகம் என்பது கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதை உணர முடிகிறது.
உண்மை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறாமல் இருந்த போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என நாம் கோரிக்கை வைத்தோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றால், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்க ளாட்சி உள்ளூராட்சி சபைகளில் நடைபெறும்.
அவ்வாறு மக்களாட்சி ஏற்பட்டு விட்டால், அந்தந்த சபைகள் தத்தம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்மவர்கள் கூறினார்கள்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது. வட்டார ரீதியில் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நாங்கள் வெற்றி பெற்றால், அது செய்வோம். இது செய்வோம் எனத் தேர்தல் பிரசாரம் முழங்கியது.
தேர்தல் முடிந்து மக்களாட்சி, மாநகர – நகர – பட்டின – பிரதேச சபைகளில் அரங்கே றியது. அவ்வளவுதான், ஆகக் குறைந்தது தெருநாய்களைக் கூட கட்டுப்படுத்த முடிய வில்லை.
ஆம், உள்ளூராட்சி சபைகள் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை, கஷ்டங்களை அறிந்து அவற்றை நிவர்த்திக்க வேண்டும்.
இதில் தெருநாய்த் தொல்லை என்பது தாங்க முடியாதளவில் பெருகியுள்ளது. எனவே அனைத்து உள்ளூராட்சி சபைகளும் இதில் அதீத கவனம் எடுத்து தெருநாய்களை முற்றறக் கட்டுப்படுத்த வேண்டும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


