வியாசர் பதில்கள்
Share
1) சமீபத்தில் தாங்கள் சந்தித்த பெரும் பிரச்சினை ஒன்றை சிரிக்கும் வகையில் கூற முடியுமா வியாசரே?
தெய்வேந்திரம் – வரணி
நான் வீட்டுக்குள் செல்கிறேன் மனைவி பேசத்தொடங்கினாள்.
நான் அம்மா வீட்டை போய் இரண்டு நாள் நின்று விட்டு வரப் போகின்றேன்.
வீட்டில் தனியாக இருக்கப் பயம் என்றால் எனது நண்பியைக் கூப்பிடு என்றாள்.
நான் சொன்னேன் உனக்கு சரியென்றால் எனக்கும் சரி என்று.
கொஞ்சம் பொறு என்றவள் காதிலிருந்த இயர் போனை கழற்றியபடி என் தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
நீங்கள் ஏதோ சொன்னீர்கள். அது எனக்குக் கேட்கவில்லை. என்ன சொல்லுங்கள்…? என்றாள்.
என் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
2) சூர்யாவின் கருப்பன் திரைப்படம் பற்றிக் கூறுங்கள் வியாசரே?
பிரவீஸ்-பருத்தித்துறை
கருப்பன் சாமி ஒரு சாதாரண மனிதனுள் புகுந்து எதிரியை வேட்டையாடுவதே கதைக்களம்.
இந்த ஒற்றை வார்த்தையை வைத்து சூர்யா என்கின்ற ஒப்பற்ற நடிகனூடே கருப்பனாக பேயாடியிருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி.
திரையரங்குகளில் கருப்பனுக்கு அருள்வர (கலை) ஆடும் ஆட்டத்தின் பரவசத்தில் திரையரங்குக்குள் இருப்பவர்கள் பலருக்கு அருள் (கலை) வரும் காட்சியை பார்க்கும் போது திரைப்படத்தின் வெற்றி புலப்படுகிறது.
200 கோடியைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறான் கருப்பன்.
3) புலம்பெயர் உறவுகள் தமிழீழம் மலரும் என்கிறார்களே?
எக்ஸ்.வை.இசற் – யாழ்ப்பாணம்
அவ்வளவு இலகுவில் மலர்வதற்கு அதுவொன்றும் செவ்வரத்தைப் பூவோ அல்லது மல்லிகைப்பூவோயில்லையே.
உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழினத்தின் இன்னல்களையும் அவர்கள் பட்ட வலிகளையும் பலமாக எடுத்தியம்பியவர்கள் எம் புலம் பெயர் உறவுகள் என்பதில் மாற்றுக்கருத் தில்லை ஆயினும் புலம்பெயர் உறவுகள் சிலர் ஈழம் எப்போதும் கொதி நிலையில் இருக்க விரும்புகிறார்கள்.
அது தான் ஏன் என்று புரியவில்லை.
இன்று வரை பொருளாதார நெருக்கடி எம்மை கடுமையாய் நெருக்கும் போது அவர்களின் உழைப்பும் அதனால் கிடைக்கும் பணமும் மிக முக்கியமானது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
4) தமிழின அழிப்பைக் கொண்டாடும் சகோ தர இனத்தவர்கள் பற்றி கூற முடியுமா வியாசரே?
ஜெ.ஜெ – யாழ்ப்பாணம்
கஞ்சியில் இட்ட பயறாய் ஆங்காங்கே இனவாத சிந்தனை கொண்ட பெரும்பான்மை யினர் இருக்கவே செய்கின்றனர்.
கொழும்பு வெள்ளவத்தையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை குழப்பிய இளைஞர் அணி நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது.
ஈழ விடுதலைக்காக முன்னின்ற ஒரு ஒப்பற்ற தலைவனை அவமதிப்பதை சிங்கள மக்களே விரும்ப மாட்டார்கள்.
துரதிஷ்டம், குறித்த தவறை அங்கு கூடிய பெரும்பான்மை இளைஞர்களில் சிலர் செய்தனர்.
இவ்வாறான செயல்கள் மீண்டும் மீண்டும் இனமுரணை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்து.
5) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றிருந்ததே வியாசரே?
தர்மதன்-முல்லைத்தீவு
முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் பட்ட வலியும் வேதனையும் இழப்புக்களும் கொஞ்ச நஞ்சமில்லை.
சிறிய ஒரு பகுதிக்குள் இலட்சக்கணக்கான மக்களை மந்தைகள் போல அடைத்து விட்டு அவர்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தி திட்டமிட்டு இனப்படுகொலை செய்ததை நாம் மறப்போமாக இருந்தால் நாம் தமிழினம் என்று சொல்லத் தேவையில்லை.
முள்ளிவாய்க்காலில் இறந்து போனது எம்மினம். அவர்களை நாம் நினைவு கூருவோம்.
அது பலருக்கும் புகைத்தால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
6) இனப்படுகொலை நடந்து 17 வருடங்கள் கடந்து விட்டன. இனியும் நீதி கிடைக்க வாய்ப்புண்டா வியாசரே?
சுதன்-குப்பிழான்
ராஜபக்ஷக்கள் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தை இன்னமும் கைவிடவில்லை.
அப்படியயனின் அவர்களின் உள்நோக்கம் என்ன?
ஆம், நாம் ஆட்சியைக் கைப்பற்றினால் தமிழினத்தை ஒரு பிடி பிடிக்கலாம் என்பது தான்.
ராஜபக்ஷக்களுக்கும் அவர்களின் எடுபிடிகளுக்கும் கைதான் கட்டப்பட்டிருக்கிறது தவிர கண்கள் அல்ல என்பதையும், அவர்களின் கைக்கட்டு அவிழ்ந்தால் என்ன ஆகும் என்பதையும் புரிந்து கொண்டால் சரி.
7) தமிழக முதல்வர் விஜய் பற்றி சமீபத்தில் கிளம்பிய சர்ச்சை தொடர்பில் வியாசரின் கருத்தென்ன?
ஜனநாயகன்-ஈழம்
சர்ச்கையில்லாத மனிதன் இல்லை. நாம் கைகூப்பிக் கும்பிடும் கடவுளர்களுக்குக் கூட சர்ச்சைகள் இருக்கவே செய்கின்றன எனின் சாதாரண மனிதர் நாம் எம்மாத்திரம்.
தி.மு.கவின் திட்டமிட்ட சதிகளுக்குள் விஜய் சிக்க வைக்கப்பட்டார் என்ற உண்மையை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.
முப்பது வருடங்கள் திரைப்படங்களில் நடக்கும் போது வராத சர்ச்சைகளும், வதந்திகளும் அவர் அரசியல் கட்சி தொடங்கியதும் வருகின்றது எனின் அந்தப் பக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமே.
8) வெளிநாட்டில் நிற்கும் நண்பன் அடிக்கடி தொடர்பு கொண்டு ஊர்ப் புதினம் என்னவென்று தொல்லை பண்ணுகிறானே?
ரெலெக்ஸ் – மாதகல்
தம்பி ரெலெக்ஸ். ஒரு உபாயம் சொல்கிறேன். அடுத்தமுறை இதைப் பிரயோகித்துப்பார்.
உன் நண்பன் தொடர்பு கொள்ளும் போது நண்பா எனக்கு அவசரமாக பத்து இலட்சம் தேவையாக இருக்கிறது தருகிறாயா? என்று கேளும்.
வந்தால் மலை போனால் … அவ்வளவு தான் தம்பி.


