ஈரானுடன் போர்: கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்!
Share
அமெரிக்காவுக்கும் ஈரா னுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மேற்கு ஆசியாவில் மீண்டும் போர்ப்பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் ஆகிய
இருதரப்பினரிடையே 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
உடனடியாக இருதரப்பினரும் தங்கள் நாடுகளுக் குத் திரும்பினர். அதன் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வழக்கமான தனது அதிரடி நடவடிக் கைகளை ஆரம்பித்திருக்கிறார்.
“ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையவோ, வெளியேறவோ முயற்சி செய்யும் கப்பல்களை அமெரிக்கா திங்கட்கிழமை அமெரிக்க நேரம் காலை 10 முதல் முற்றுகையிடும்” என்று ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும், “ஈரானுக்கு நுழைவுக் கட்டணம் செலுத்திய கப்பல்களை, சர்வதேசக் கடற்பகுதியில் தேடிப்பிடித்து இடைமறியுங்கள்” என்று அமெரிக்கக் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, கிறிஸ்தவக் கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் லியோவை, கடுமையாக விமர்சித்திருக்கிறார் ட்ரம்ப்.
ஈரானுக்கும், அமெரிக்கா – இஸ்ரேலுக்கும் இடையிலான போர் குறித்து சமீபத்தில் போப் லியோ கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, “போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும். நம்பிக்கை அனைவரையும் இணைக்கும். தற்பெருமையும், பணமும் போதும். வலிமையை வெளிக்காட்டியதும் போதும். போர்கள் போதும். வாழ்க்கையில் சேவை செய்வதில் உண்மையான வலிமை வெளிப்படட்டும்.
“முட்டாள்த்தனமான போர்களிலிருந்து ஆட்சியாளர்கள் வெளியே வரவேண்டும். போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம்.”
என்று போப்லியோ பேசியிருந்தார். மேலும், ட்ரம்பின் ஈரானின் உட்கட்டமைப்பை அழிப்பேன் என்ற அச்சுறுத்தல்தான் “எல்லாம் வல்லவர் என்ற ‘ட்ரம்பின் மாயை’ என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் விபரித்திருந்தார்.
அவரது பேச்சால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி ட்ரம்ப், போப்
லியோவை கடுமையாக விமர்சித்து, தன்னை இயேசுவாகச் சித்திரிக்
கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அமெரிக்காவின் கொடி, இராணுவ விமானங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரி என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம்.
அமெரிக்காவுக்குள் பெருமளவு போதைப்பொருட்களை அனுப்பி, சிறையில் இருந்த கொலைகாரர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், கொலையாளிகளை நம் நாட்டுக்குள் அனுப்பிக் கொண்டிருந்த வெனிசுலாவைத் தாக்கியது ஒரு தீவிரக் குற்றம் என்று நினைக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம்.
அமெரிக்க ஜனாதிபதியை விமர்சிக்கும் ஒரு போப் எனக்கு வேண்டாம்” என்று ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
ஏற்கெனவே, அமெரிக்காவின் காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து, ஈரான் மீது ட்ரம்ப் போர் தொடங்கியதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளும், இந்தப் போரை விரும்ப
வில்லை.
ஹார்முஸ் நீரிணையை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வாருங்கள் என்ற ட்ரம்ப் அழைப்பையும் ஐரோப்பிய நட்பு நாடுகள் ஏற்கவில்லை.
அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற அதிகாரத்துக்கு பயந்து, அந்த நாட்டின் பொருளாதார வலிமைக்கும், இராணுவ வலிமைக்கும் பயந்து எல்லோரும் மௌனம் காக்கிறார்கள்.
பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, ட்ரம்ப் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் உட்பட எதுவும் அங்கு நடக்கவில்லை.
எனினும், ஹார்முஸ் நீரிணை மூடல் உண்டாக்கிய எண்ணெய் விலையேற்றமும், ஈரானியர்கள் வளைகுடா நாடுகள் மீது தொடுத்த தாக்குதலும், சளைக் காமல் போர் செய்ததும் அவரை இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டத் தூண்டின.
ஆனால், போரை அவரால் தனது முகம் கவிழாமல் நிறுத்த முடியவில்லை.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையில் அமெரிக்கக் குழுவினரும், ஈரான் பாராளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் கலிபாஃப் தலைமையில் ஈரானியக் குழுவினரும் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர்.
ஈரான் தரப்பில் 10 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அமெரிக்காவால் முடக்கப் பட்டிருக்கும் தங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என முன்நிபந்தனைகளையும் ஈரான் விதித்தது.
ஹார்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தக்கூடாது, அணு ஆயுதத் தயாரிப்பில் இனிமேல் ஈடுபடக்கூடாது, நெடுந்தொலைவு பாயும் ஏவுகணைகளைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்தது.
இனி அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை
“ஈரானிடம் நாங்கள் காணவில்லை” என்று அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ் தோல்விக்குக் காரணம் சொன்னார்.
கடந்த செவ்வாய் ஏப்ரல் 14 கசிந்த செய்திகளின்படி ஈரானை யுரேனிய
செறிவூட்டலை 20 ஆண்டுகள் இடை நிறுத்திக் கொள்ளுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும், ஈரானியர்களோ அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
மேலும், ஈரான் வசம் இருக்கும் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க அமெரிக்கா கேட்டுக்கொண்டதாகவும், அந்த யுரேனியம் ஈரானுக்குள்தான் இருக்க வேண்டும் என ஈரானியர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.
ஆனால் அதை அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்த முடியாதவாறு நீர்த்துப்போகச் செய்வதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். (ஈரானியர்கள், எதிர்காலத்தில் அதை மீண்டும் குண்டுத் தரத்துக்குச் செறிவூட்டலாம்) மற்றொரு சுற்று நேரடி பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஈரானைப் பொறுத்தளவில், 38 நாள் போரில் மிகப்பெரிய இழப்பைச்
சந்தித்திருக்கிறது. இவற்றைச் சரி செய்ய ஒரு தலைமுறை ஆகும்.
ஈரானில் பலபேருக்கு வேலை போய்விட்டது. கடைகளும், தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்திருக்கின்றன.
கட்டார் வங்கிகளில் 6 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானின் எண்ணெய் விற்ற பணம் வங்கிக்கணக்கில் முடக்கப்பட்டிருக்கிறது. ஒரு பில்லியன் என்பது 9,300 கோடி ரூபாய்.
ஆக, இது மிகப்பெரிய தொகை. இது ஈரானுக்கு மிகத் தேவையானதாக இருக்கிறது. அமெரிக்காவால் முடக்கப்பட்டிருக்கும் அந்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கிய கோரிக்கை.
அமெரிக்காவும் இந்தப் போரில் நிறைய இழந்திருக்கிறது. மிகுந்த செலவு செய்துதான் நடத்தும் இப்போரை மீண்டும் அமெரிக்கா தொடர்ந்து நடத்த வேண்டும் என்றால் நிறைய பொருள் தேவை.
எனவே, அமெரிக்க காங்கிரஸக்கு ஜனாதிபதி ட்ரம்ப் பணம் கேட்டுப் போயிருக்கிறார். அங்கு பணம் தருவார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தப் போருக்கு அவர் காங்கிரஸின் ஒப்புதலைப் பெறவில்லை.
உலகின் எண்ணெய்ப் போக்குவரத்தில் 20 சதவிகிதம் ஹார்முஸ்
நீரிணை வழியாகத்தான் செல்கிறது என்பதால், அதை ஈரான் முடக்கியவுடன் உலகில் எண்ணெய்த் தட்டுப்பாடு, எரிவாயுத் தட்டுப்பாடு அதிகரித்து, எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது. அந்த விவகாரம், அமெரிக்காவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது.
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று ட்ரம்ப் சொல்கிறார். அது ஒரு சர்வதேச நீரிணை என்று “சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கழகம்” தெரிவித்து விட்டது.
கட்டணம் வசூலிப்பது சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அந்த அமைப்பு சொல்லிவிட்டது. ஆனாலும், கட்டணம் வசூலிப்போம் என்ற நிலைப் பாட்டில் ஈரான் உறுதியாக இருக்கிறது.
மீண்டும் ஈரானுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை ட்ரம்ப் எடுக்கிறார். இதன் விளைவாக அமெரிக்கர்கள் இன்னும் அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே, எரி பொருளின் விலை உயர்வு காரணமாக, ஒரு வழக்கமான அமெரிக்க குடும்பம் ஒரு மாதத்திற்கு 233 டொலர் அதிகமாக அதே பொருட்களுக்கும், சேவைகளுக்கும் செலவு செய்கிறது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிகமாகும். ஒரு நாளைக்கு தோராயமாக 20 இலட்சம் பீப்பாய்கள் ஈரானியக் கச்சா எண்ணெய் விற்பனை, உலக சந்தையில் எண்ணெய் விலைகளை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தது.
இந்த எண்ணெய் ட்ரம்பின் இந்த புதிய முற்றுகையால் சந்தைக்கு வருவது சிரமம்.
இருதரப்பும் தான்மையை கருத்தியலுக்கான போராய் உருவகப்படுத்தி யிருக்கின்றன.
ட்ரம்ப் ஈரான் அணு சக்தியாய் மாறுவதைத் தடுப்பதற்கே இந்தப் போர் என்கிறார். அது எங்களி டமிருந்து பிரிக்க முடியாத உரிமை என்று ஈரானியர்கள் சாதிக்கிறார்கள். இருதரப்பும் இறங்கி வந்தாலொழிய ஈரானிய மக்களின் துயரும், உலகத்
தின் இந்த பதற்ற நிலையால் உண்டான இடரும் தீரப்போவதில்லை.


