வியாசர் பதில்கள்
Share
1) வடக்கில் ஆளும்-எதிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்களா வியாசரே?
மிராட்-யாழ்நகர்
எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதுடன் நிறைவுற்று விடுகிறது.
களவிஜயம் இல்லை. ஆதலால் மக்கள் படும் துயரம் தெரியாது. ஆனால் நாம் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்று அறையில் இருந்து அறிக்கையிட்டு அதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதுடன் இவர்களின் தலையாய கடமை முடிந்து விடுகிறது.
2) புலிகளின் பாடலுக்கே இவ்வளவு என்றால்…?
சுதன்-குப்பிழான்
என்ன செய்வது தோற்கடிக்கப்பட்ட இனமாக தமிழினம் இருப்பதால் என்னென்ன கொடுமையயல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழினத்தின் கலை கலாசாரத்தின் அடையாளம் ஈழ விடுதலைப் போர்.
அந்தப் போரைப் பற்றிப் பேசக் கூடாது. அதில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரக் கூடாது என்று தடை போடுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.
ஏனெனில் ஈழ விடுதலைப் போரில் உயிரிழந்த ஒவ்வொருத்தருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பம் வடக்குக் கிழக்கில் வாழ்கிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி.
3) பலருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் கனவு இருக்கிறது போலத் தெரிகிறதே?
தொண்டன்-வதிரி
சிலர் இலவு காத்த கிளி போல காலக் கணக்கில் காத்திருக்கின்றனர்.
இன்னும் சிலர் எடுத்த எடுப்பில் தமிழகத்திற்கு விஜய் முதலமைச்சர் ஆனது போல தாமும் ஆகிவிடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள்.
சிலரோ தமக்கு வேண்டப்படுபவர்களிடமெல்லாம் என்னை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்குங்கள் என்று கெஞ்சாத குறையாய் பலாப்பழமும் ஈயுமாய் ஈய்கிறார்கள்.
அட நாசம். அவ்வளவுக்கு முதலமைச்சர் பதவி பவரானதா என்ன? சபை அமைந்தால் எப்படியும் குழப்பமும் கூக்குரலும் நடக்கப் போவது உறுதி.
4) மீண்டும் இனவாதத்தைக் கொட்டத் தொடங்குகின்றனர் போல?
ரதீஷ்-யாழ்ப்பாணம்
குளத்தில் தாமரைக் கொடி படர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள் பச்சைக் கம்பளம் விரித்தாற் போல் இருக்கும் அதில் அழகிய தாமரை மலர்ந்திருக்கும்.
அந்த ரம்மியமான அழகைப் பார்க்கும் போது மனது அவ்வளவு உற்சாகமடையும்.
ஆனால் அந்த தாமரைக்கு அடியில் எவ்வளவு ஆபத்து நிறைந்த சேறும் சகதியும் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுபோலத்தான் பேரினவாதிகளின் பேச்சுக்கள் தேன் தடவியதாய் இருந்தாலும் உள்ளே ஆபத்தும் வன்மமும் நிறைந்தே இருக்கும்.
5) மரம் நடுவது நின்று விட்டது. ஆனால் ஏ.சி வாங்குவது தொடர்ந்து கொண்டேயிருக்கிறதே வியாசரே?
மயூரன்-பருத்தித்துறை
மரம் வெட்ட வேண்டுமென்றால் அதற்கு முறையான அனுமதி எடுக்க வேண்டும்.
அந்த மரம் ஏன் எதற்காக வெட்டப்படுகிறது என்கின்ற தகுந்த காரணம் கூற வேண்டும்.
ஆனால் நாம் அவ்வாறு நடந்து கொண்டி ருக்கின்றோமா?
ஒருவர் கூறினார். வீட்டுத்தேவைக்கு நான்கு பனை தறிக்க அனுமதி பெற்று அதில் நாற்பது பனை தறித்தேன் என்று.
இவ்வாறனவர்கள் இருக்கும் வரை ஏ.சி விற்பனை அதிகரிக்கவே செய்யும்.
6) ராஜபக்ஷக்கள் நல்லவர்களாமே உண்மையா?
ராஜன்-வவுனியா
வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழினத்தை கொத்துக் கொத்தாய்க் கொன்றொழி த்தவர்கள்.
பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று ஒரு இனச்சுத்திகரிப்பையே அரங்கேற்றி யவர்கள்.அப்பாவிப் பொதுமக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வெளியுலகம் வராமல் செய்தவர்கள்.
தமிழர் தாயகத்தில் போதைவிதைப்பு நடத்தப்படும் போது மெளனமாக இருந்த வர்கள்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள்.
இவர்களா நல்லவர்கள்?
7) காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் வியாசரே?
சேகர்தாஸ்-மந்திகை
காதலி என்பவள் காரில் பயணம் போவது போல. ஒருவேளை அந்தக் காதல் பிடிக்க வில்லை என்றால் காரை நிறுத்திவிட்டு இடையில் இறங்கி விடலாம்.
மனைவியென்பவள் விமானத்தில் பயணிப்பதைப் போன்றது.
போக முடிவெடுத்து விமானத்தில் ஏறிவிட்டால் இடையிலெல்லாம் இறங்க முடியாது.
அவ்வாறு இடையில் இறங்கினால் டங்குவார் அறுந்திடும்.
8) நாங்கள் கேள்வி கேட்டு மடக்கினால் நீங்கள் பதில் சொல்லி மடக்குகிறீர்களே வியாசரே?
சிவம்-வதிரி
தம்பி சிவம் அவ்வாறு ஒன்றும் இல்லை. உண்மை எதுவென்றால், இங்கு கேள்வி கேட்பதை விட பதில் கூறுவது சுலபம்.
இதுவே எனது கேள்விக்கு நீங்கள் பதில் கூறுவதாக இருந்தால் நிச்சயம் என்னால் கேள்வி கேட்க முடியாது.
உங்கள் கேள்விகள் என்னை உத்வேகப் படுத்துகிறது அவ்வளவே.


