Type to search

Headlines Local News News

மன்னார் மதுபானசாலைகளில் பகல் நேரத்தில் கள் விற்பனைக்குத் தடை!

Share

மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகரசபையில் நேற்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பொது சுகாதார வைத்தியாதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

மன்னார் நகரசபை தலைவர் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சந்தைப்படுத்தல் சவால்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை முறையாக விற்பனை செய்யமுடியாமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் 5 மாதங்களுக்கு கள் விற்பனையை மதுபான சாலைகளில் விற்பனை செய்வதை நிறுத்தி தருமாறு உள்ளூர் கள் உற்பத்தியாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது 

அதன்படி மன்னார் நகர்ப்பகுதியில் உள்ள மதுபானசாலைகளில் தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 

உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள் விற்பனையாவதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம்  தற்போது இயங்காமல் இருக்கும் உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 

இதன் மூலம் உற்பத்தியாளர்களின் கள்ளினைத் தரமான முறையில் போத்தல்களில் அடைத்து வெளிமாவட்டங்களுக்கும் சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனைசார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link