தன் வினை தன்னைச் சுடும்…
Share
பட்டினத்தாரை அறியாதார் யாருமில்லை. பட்டினத்தார் துறவறம் பூண்டு பிச்சை எடுத்து உண்டு வருகிறார் என்ற செய்தி அவரின் தமக்கையாருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதாய் உணர்ந்தார்.
ஒருநாள் பட்டினத்தாரை உணவு உண்பதற்கு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். பட்டினத்தாரும் அங்கு சென்றார். பட்டினத்தாருக்கு அப்பம் உண்பதற்கு வழங்க ப்பட்டிருந்தது. அந்த அப்பத்தில் விசம் கலந்திருப்பதை உணர்ந்து கொண்டார் பட்டினத்தார்.
தான் துறவறம் பூண்டு பிச்சையெடுத்து உண்பது தன் தமக்கையாருக்கு அவமானம். ஆகையால் தன்னை கொல்வதற்கு முடிவெடுத்து விட்டார் என்று உணர்ந்து கொண்ட பட்டினத்தார்; “தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று கூறி அந்த விசம் கலந்த அப்பத்தை தன் தமக்கையாரின் வீட்டின் கூரையில் எறிந்தார். அந்த வீடு நெருப்புப் பற்றி முழுவதுமாய் எரிந்து சாம்பலாகிப் போனது.
இங்கு எதற்காக பட்டினத்தாரின் கதை என்று நீங்கள் சிந்திப்பது புரிகிறது.
இந்தக் கதைக்கும் தற்போதைய இலங்கையின் அரசியல் சூழ்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம், இந்த நாட்டில் எத் தனையோ பெரும்பான்மை ஆட்சியாளர்கள் ஆட்சிபீடமேறி ஆட்சி நடத்தியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தமிழினத்துக்கு துரோகத்தையே பரிசளித்தனர். இந்தத் துரோகத்தில் மிக மோசமான செயற்பாடுகளைச் செய்வதவர்கள் ராஜபக்ஷக்கள் என்றால் அதில் மாற்றுக் கருத்தேதும் இருக்காது.
வன்னிப் பெருநிலப்பரப்பில் பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று ஒரு இனச் சுத்திகரிப்பையே செய்த கொடுமை அவர்களையே சாரும்.
தவிர இவர்களின் ஆட்சிக்காலத்தில் எத்தனை சூட்டுச் சம்பவங்கள் எத்தனை காணாமல் போதல்கள் என்பன நிகழ்ந்தன என்பதைக் கணக்கிட முடியாத அளவில் நிலை இருக்கிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தமிழினத்தின் மீது அதிகம் பிரயோகித்தவர்கள் ராஜபக்ஷக்களே என்பது நிறுதிட்டமான உண்மை.
தமிழினத்தின் மீதான அத்தனை கொடுமைகளையும் செய்த இவர்களை சர்வதேச நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என்ற தமிழினத்தின் குரல் சர்வதேசத்தின் காதில் கேட்காமல் போக, தோற்றுப்போன இனமாக தமிழினம் அமைதியானது.
இங்குதான் இறைவன் தன் தீர்ப்பை எழுதியிருக்கின்றான்.ஆம், தமிழினத்தைக் கருவறுத்த ராஜபக்சக்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமெனின், அவர்களின் கையில் ஆட்சி அதி காரத்தை மீண்டும் கையளித்தால் மாத்திரமே சாத்தியமாகும் என்பற்கு இறைவன் எவ்வாறு செயல் வடிவம் கொடுத்தான் தெரியுமா?
மைத்திரிபால தலைமையிலான நல்லாட்சியை உடைத்தால் மாத்திரமே தங்களால் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியும் என்ற சிந்தனையை அவர்களிடம் தோற்றுவித்து அதற்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து, சிங்களவர்களின் உயிர்களைப் பறித்து, நல்லாட்சி அரசு நல்லாட்சியே இல்லை என்று சிங்கள மக்களுக்குச் சொல்லி, மீண்டும் நாம் வருவோம் என்று கூறும் சிந்தனையை அவர்களில் தோற்றுவித்தான்.
முடிவு, அனைத்தும் அவர்கள் நினைத்தது போல நடந்தது. ஆயினும் இந்த உண்மை வெகுசீக்கிரத்தில் வெழுக்கும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
இப்போது அனைத்து உண்மைகளும் ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிந்துவிட்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பிக்க முடியாதபடி சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றனர். தமது கையில் அதிகாரம் இருந்த போது தமிழினித்து இளைஞர்கள் மீது கண்டமேனிக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை யார் பிரயோகித்தனரோ, அவர்களே இப்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடே எம்மைக் கைது செய்ய வேண் டாம் என்ற கோரிக்கையுடன் நீதி மன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது ஊழ்வினைப் பயனைப் பிரதிபலிக்கின்றது.
இங்குதான் நாம் பட்டினத்தாரின் “தன் வினை தன்னைச் சுடும்” என்கின்ற பொன்மொழியை
உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆக, தமிழினத்தின் மீது வன்மத்தைக் காட்டியவர்கள் சட்டத்திலிருந்து தவறினாலும் அவர்கள் ஏதோவொரு வகையில் தண்டிக்கப்படுவார்கள் என்பதை இறைவன் தன் திருவிளையாடலினூடே காட்டி நிற்கின்றான்.
அபிமன்யு.


