Type to search

Headlines News World News

இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலை நடத்திய ஈரான்

Share

இஸ்ரேலின் வடக்கு பகுதியை இலக்கு வைத்து ஈரான் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்ட கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் சந்தர்ப்பமாகும். 

இந்த தாக்குதல் தொடர்பில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை வௌியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு எச்சரிக்கை மட்டுமே என தெரிவித்துள்ளது. 

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டு, இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்தால், அடுத்தகட்ட பதிலடிகள் இன்னும் பரந்த அளவில் இருக்கும் என்றும், அவை பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளையும் உள்ளடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஹைஃபா நகருக்கு தென்கிழக்கே அமைந்துள்ள ரமத் டேவிட் விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தப்பட்டதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த உடன்படிக்கையின் கீழ், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன என்றும் அந்த படை குற்றம் சாட்டியுள்ளது. 

எவ்வாறாயினும், தாக்குதலை நடத்துவதை நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அத்துடன் அமெரிக்கா ஈரானுடன் மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று டொனால்ட் டிரம்ப் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். 

அத்துடன் நெதன்யாகுவுக்கு வேறு வழியே இருக்காது. நான்தான் இறுதி முடிவுகளை எடுப்பவன், அனைத்து முடிவுகளையும் நானே எடுக்கிறேன். அவர் முடிவுகளை எடுப்பதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். 

மூன்று தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, ஈரானின் சமீபத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டாம் என நெதன்யாகுவிடம் கோருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link