உற்ற நேரத்தில் வெளியிடப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் அறிக்கை
Share
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்டன என்ற செய்தி சிங்கள மாணவர்களிடத்தும் தென்பகுதி மக்களிடத்தும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் சாதாரணமானதன்று.
ஆம், யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் சேதமாக்கப்பட்டன என்ற செய்தி வெறுமனே “சேதம்” என்பதோடு நின்று விடக்கூடியதல்ல.
மாறாக, அது பௌத்த மதத்திற்கு எதிரானதாக, சிங்கள மாணவர்களுக்கு விரோதமானதாக நிகழ்த்தப்பட்ட சம்பவமாகவே பார்க்கப்படும்.
அதாவது, மேற்போந்த செய்தி இந்த நாட் டில் இன, மத வன்மத்தைத் தூண்டுவதாக வும், இனவாதம் பேசமுடியாதுள்ளது என்ற பெருங்கவலையில் இருக்கக் கூடிய தென் பகுதிப் பேரினவாதிகளுக்கு அவல் கொடுத்தது போலவும் நிலைமையை ஆக்கவல்லது.
தவிர, தற்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியில் இனவாதம், மதவாதம் என்பன அடக்க நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன.
அதேநேரம் இனவாத சிந்தனை ஒடுங்க வேண்டும் என்ற மனநிலை இந்த நாட்டு மக்க ளிடம் தலைப்பட்டுள்ளது.
உண்மை. கடந்த காலங்களில் இந்த நாட் டில் ஏற்பட்ட இன, மதவாதங்களால் கொல்லப்பட்ட மக்கள் ஏராளம் – அதற்கான இழப்புகள் பல.
வாழ வேண்டிய மனித உயிர்கள் இன வக்கிரத்தால் மத மேலாதிக்கத்தால் பறிக்கப் பட்டன.
இந்தக் கொடும்பாவச் செயல்கள் பேரினவாதக் கும்பல்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரசாரங்களால் நடந்தவை.
ஆம், இந்த நாட்டில் மனிதக் குருதி ஓடுவதைப் பார்த்து மகிழ்கின்ற அரக்கர் கூட்டத்தின் குருதிப் பசி இன்னமும் தீர்ந்த பாடில்லை.
ஆகையால் அவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களின் போதெல்லாம் தமிழர்கள் சிங் களவர்களுக்கு எதிரானவர்கள் என்பதான இனவாதத் தீயை மூட்டுவர்.
நிலைமை இதுவாக இருக்கும் போது, யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்டதான சம்பவத்தைப் பொதுமைப்படுத்தும் போது நாங்கள் சொன்னோம் நீங்கள் கேட்கவில்லை என்ற சத்தத்தோடு பேரினவாதப் பேய்கள் சன்னதம் கொள்ளும்.
இங்குதான் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவப் பீட மாணவர் ஒன்றியம் காலம் உணர்ந்து நிலைமை அறிந்து காத்திரமான அறிக்கையை உற்ற நேரத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் நடுநிலைத் தன்மை, அதன் நேர்மைத் தன்மை, அதற்குள் இருக் கக்கூடிய வெளிப்படைத் தன்மை என்பனவற்றின் நேர்த்தி கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
ஆம், வெசாக்தின அனுஷ்டிப்பு மாணவர் ஒன்றியத்தின் ஒப்புதலுடனே நடந்தன – வெசாக்தின நிகழ்வுகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்கினோம் – ஒரு சில விசமிகள் இழைத்த கபடத்தனத்தை பொதுமைப்படுத்தி மக்கள் சமூ கத்தில் வன்மத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் எனும் பொருட்செறிவுடன் விடுக்கப்பட்ட அந்த அறிக்கை நம் வழமையான அறிக்கை கலாச் சாரத்தினின்றும் விலகி ஒற்றுமையினூடான மனித வாழ்வின் முக்கியத்துவம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆக, குறித்த மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை காலம் உணர்ந்த தக்க செயலாகும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


