இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டம்: கடும் கண்டனம் வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்!
Share
“பயங்கரவாத” செயல்களில் ஈடுபட்டு இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்கள், மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டமூலத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி, யூத இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களைக் கொலை செய்தால் அவர்களுக்கு இந்தத் தண்டனை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை பாரபட்சமான சட்டம் எனக் குறிப்பிட்டு ஐரோப்பிய ஒன்றியமும், இஸ்ரேலின் நீண்டகால ஆதரவு நாடான ஜேர்மனியும் தமது கவலையை வெளியிட்டுள்ளன.
“இது ஒரு தெளிவான பின்னோக்கிய நடவடிக்கையாகும்” என ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, ஜனநாயகக் கொள்கைகளைப் பேணுமாறு இஸ்ரேலை அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஜேர்மனி அரசாங்கப் பேச்சாளர், புதிய சட்டத்தை “பெரும் கவலையுடன்” பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேலியப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள சூழலில், இஸ்ரேல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளமை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


