Type to search

Editorial

இதயத்தில் நிறைந்தவனை நினையாமல் இதயம் துடிக்குமோ!

Share

எதிர்வரும் 26ஆம் திகதி தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு தினம்.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித் துள்ளது.

இவை ஒருபுறமிருக்க, இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் தத்தம் சமயத்தை பரப்புவதை மிக வேகமாகச் செய்தனர்.

கூடவே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சைவலாயங்களை அடித்து நொருக்கினர். இதில் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆய சிவாலயங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.

இவை தவிர, சைவ அனுட்டானங்களைக் கடைப்பிடிப்பது, விரதம் இருப்பது என சைவ சமய வழிபாடுகளுக்குத் தடை விதித்தனர்.

இதனால் சைவ மக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். எனினும் உருவ வழிபாடாக நடந்ததை சைவ மக்கள் இதய வழிபாடாக மாற்றினர்.

ஒவ்வொரு சைவ சமயியும் சிவனை தம் இதயத்தில் இருத்தினர்.

பஞ்சாட்சரம் எனும் ஐந்தொழுத்தை தம் நாவில் ஏற்றினர்.

இதயத்தில் வீற்றிருக்கும் இறைவனை நாவால் அர்ச்சித்தனர். விரதம் இருந்தனர். விரதம் அனுஷ்டிப்போர் வாழை இலையில் போசனம் உண்ணுதல் சைவப் பண்பாடா கையால், அதனின்றும் விலக முடியாதவர் கள் வாழை இலையில் உணவைப் பரிமாறிப் பின்னர் அந்த வாழையிலையை வீட்டின் கூரையில் மறைத்து வைத்தனர்.

வாழை யிலையில் உணவு உண்டால் அது சைவ சமயத்தைப் பின்பற்றுவதாகக் கருதி அந்நியர்கள் சைவ மக்களைத் தண்டித்ததன் காரணமாக அப்படியயாரு ஏற்பாட்டை சைவ சமயத்தவர்கள் செய்தனர்.

இந்த நிட்டூரம் பல நூற்றாண்டுகள் கடந் தனவாயினும் சைவ மக்கள் சிவனை தம் இதயத்தில் இருத்தி வழிபட்டதால் சைவ சமயத்தை அழிக்க முடியாமல் போயிற்று.

பல நூற்றாண்டுகளாக குடியேற்றவாதி கள் சைவ நிந்தனை செய்தனராயினும், இன்று அதன் முடிவு இலண்டன் மாநகர வீதியில் தேரோடுகிறது. முருகக் கடவுள் வீதி வலம் வருகிறார். பந்தியிருத்தி வாழை இலை வைத்து அன்னம் பரிமாறப்படுகிறது.

இதில் வேடிக்கை என்னவெனில், அன்று இலங்கையில் சைவத்தை அழிக்க நினைத்த பிரிட்டிஷார் இன்று சைவாலயங்களுக்குச் சென்று தாமும் வழிபடுகின்றனர்.
கூடவே பந்தியில் இருந்து வாழையிலை யில் உணவு உண்ணுகிறார்கள். எப்படி என்று பார்த்தீர்களா?

அன்று சைவத்தை அழிக்க நினைத்தவர் கள் இன்று தங்கள் நாட்டில் சைவம் வளர்வது கண்டு மகிழ்கின்றார்கள். வாழையிலையில் உணவு உண்பதை பெருமையாகக் கருது கிறார்கள்.

இதுபோலவே, இன்று தியாகி திலீபனின் நினைவுகூரலுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் என்றோ ஒரு நாள் சிங்கள மாணவர்களும் திலீபனின் தியாகத்தை பாடப்புத்தகத்தில் படிப்பர்.

ஏனெனில் திலீபனைத் தமிழ் மக்கள் தங் கள் இதயங்களில் குடியிருத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link