இராஜதந்திரம் எதுவும் அறியாத நம் தமிழ் அரசியல்
Share
அரசியலில் இராஜதந்திரம் என்பதுதான் பிரதானமானது. பாகிஸ்தானை தனி நாடாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டவர் ஜின்னா.
மகாத்மா காந்தியடிகளுடன் சேர்ந்து அவரூடாக இந்திய தேசத்தில் இருந்து பாகிஸ் தானைப் பிரித்து அதனை முஸ்லிம் நாடாக ஆக்குவதில் ஜின்னா தீவிரமாக இருந்தார்.
அதேசமயம் பாகிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்குவது என்ற உத்தரவாதத்தை காந்தி யடிகளிடம் இருந்து ஜின்னா பெற்றிருந்தார்.
தேசபிதா மகாத்மா காந்தி வழங்கிய உத்தரவாதம் ஜின்னா தவிர்ந்த வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இங்குதான் ஜின்னா தனக்கு இருக்கக் கூடிய கடுமையான சுவாச நோயை யாரும் அறியாத வண்ணம் இரகசியமாக வைத்திருந்தார்.
ஆம், தனக்குக் கடுமையான நுரையீரல் வியாதி இருப்பது காந்தியடிகளுக்கோ அன்றி அவர் சார்ந்தவர்களுக்கோ தெரிந்தால், பாகிஸ்தானைத் தனிநாடாக்குகின்ற தீர்மானம் கால தாமதமாக்கப்படும்.
அதாவது, கடும் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஜின்னா தொடர்பில் சிறிது காலம் தாமதித்துப் பார்க்கலாமே. ஜின்னாவுக்கு ஒன்று நடந்து விட்டால், பாகிஸ்தானை பிரிக்காமல் அதனை இந்தியாவுடன் வைத்திருக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுவிடும் என்பதற்காகவே; ஜின்னா தனக்கு இருக்கக் கூடிய உயிராபத்தான வியாதியை மறைத்து இரகசியம் பேணினார்.
ஜின்னாவின் அந்த இராஜதந்திரம் காரணமாக பாகிஸ்தான் தனி நாடாகியது. பாகிஸ்தான் தனிநாடாகிய ஒரு வருடத்திற்குள் ஜின்னா காலமானார்.
இங்குதான் அரசியல் என்றால் அதன் வெற்றி இராஜதந்திரத்தில் தங்கியுள்ள
தென்ற உண்மை தெரியவருகிறது.
இந்த உதாரணத்தோடு எங்கள் தமிழ் அரசியலை ஒரு கணம் பாருங்கள்.
இராஜதந்திரம் ஏதேனும் எங்களிடம் உண்டா? என்றால் எதுவுமே இல்லை.
ஆம், இப்போது தமிழ் அரசியல் என்பது உட்கட்சிப்பூசல்களுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. 2020 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாக இருக்க, இலங்கைத் தமிழரசுக் கட்சி 2026 மே 17 ஆம் திகதி அதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதல் நாள் வவுனியாவில் கூட்டம் கூட்டி உட்கட்சி விவகாரத்தைப் பூதாகரமாக்கியுள்ளதென்றால், நம்மவர்களின் மனநிலை எப்படியாக இருக்கிறதென்பதை நாம் கூறி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை.
உண்மையில், 2026 மே 17 ஆம் திகதி தமிழரசுக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அந்தக் கூட்டம் எதற்கென்றால், முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை எங்ஙனம் பெறுமதியாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதாக நடத்துவதென்பது பற்றி ஆராய்வதாக இருக்க வேண்டும்.
ஆனால் அந்த நினைப்பு எதுவுமில்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதல் நாள் கூட்டம் நடத்துகின்ற அநாகரிகம் நம் அரசியல் தரப்புகளின் மனங்களில் ஆழ ஊடுருவியிருக்கும் போது, எங்கள் இனத்திற்கு விமோசனம் ஏது? விடிவு ஏது?
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


