Type to search

Headlines Local News News

கிழக்கில் இளைஞர்களை குறிவைத்து போலி NGO நிறுவனம் நடத்தி ஏமாற்றிய நபர் கைது!

Share

அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த 28 வயதுடைய வாலிபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

கனடாவிலுள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்களில் (Supermarkets) கவர்ச்சிகரமான வேலைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, இவர்களிடம் இருந்து தலா 40 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய்களை அவர் சுருட்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) முதற்கட்டமாக 7 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டிருந்தன.

முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், சந்தேகநபரைக் கைது செய்யப் பலமுறை முயன்ற போதிலும், அவர் தொடர்ந்து அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டித் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பொலிஸ் விசேட பணியக (Police Special Bureau) அதிகாரிகளுடன் இணைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள், திருகோணமலை – குச்சவெளி பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்டு, அங்கு மறைந்திருந்த சந்தேகநபரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

குச்சவெளி பகுதியைச் சேர்ந்த இந்த 28 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே நீர்கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் அவிசாவளை ஆகிய நீதிமன்றங்களில் நிதி மோசடி தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விரிவான விசாரணைகளின் படி, இந்தச் சந்தேகநபர் இதுவரை மோசடி செய்துள்ள ஒட்டுமொத்தத் தொகை ஒரு கோடி ரூபாய்க்கும் (10 மில்லியன்) அதிகம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், இவருக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து தற்போதும் பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link