Type to search

Headlines Local News News

பொருளாதார நெருக்கடிக்காக அவசர நாடாளுமன்ற விவாதத்தை நடத்த எதிர்க்கட்சி கோரிக்கை

Share

நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

இதன்போது, தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவை எதிர்க்கட்சித் தலைவர்கள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக முன்வைத்தனர்.

இச்சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் தெரிவிக்கையில்,

“இலங்கை ரூபாய் தற்போது கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. நிலவும் இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கான தெளிவான பதில்களோ அல்லது திட்டங்களோ அரசிடம் இல்லை. 

இன்று ஏனைய கட்சித் தலைவர்களுடன் இணைந்து சபாநாயகரைச் சந்தித்து, நிலவி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு கோரினோம். 

நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர், மக்களுக்கு நேர்மையான மற்றும் உடனடித் தீர்வுகள் தேவைப்படுகின்றன.” என பதிவிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு மற்றும் ரூபாய் மீதான நாணய அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் குறித்து இந்த விவாதத்தின் போது விரிவாக ஆராய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், சபாநாயகரின் உத்தியோகபூர்வ பதில் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link