வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது!
Share
சுமார் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு சீனப் பிரஜைகள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன வர்த்தகர்களாவர். இவர்கள் இன்று அதிகாலை 1:10 மணியளவில் சீனாவின் குன்மிங் (Kunming) நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ (China Eastern) விமான சேவைக்குச் சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களது பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 121 சிகரெட் கார்டன்களில் இருந்த 24,200 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


