Type to search

Headlines News Sports

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

Share

 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 37 ஓட்டங்களால்  அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.


இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்கள் குவித்தது.


தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், நடுத்தர வரிசையில் களம் புகுந்த கமில் மிஷார பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 61 ஓட்டங்களை விளாசினார். இறுதிப் பகுதியில் அதிரடியாக விளையாடிய முன்னாள் தலைவர் தசுன் ஷானக, வெறும் 24 பந்துகளில் 58 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 100 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷமார் ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


195 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.  


இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி 18.1 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.


இலங்கை அணியின் பந்துவீச்சில் மிரட்டிய துஷ்மந்த சமீர 3.1 ஓவர்களில் வெறும் 9 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், துனித் வெல்லாலகே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link