தெய்வம் நின்று கொல்லும்
Share
2009ஆம் ஆண்டு வன்னிப் பெருநிலப்பரப்பு மொத்தமும் சுக்கு
நூறாக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார்.
விடுதலைப் புலி உறுப்பினர் பலர் போரில் கொல்லப்பட்டு விட்டனர். உயிர்பிழைத்தவர்கள் படையினரிடம் சரணடைந்தனர்.
நாற்பது ஆண்டு காலமாக இந்த நாட்டில் புரையேறிக் கிடந்த பயங்கரவாதம் கூண்டோடு அழிக்கப்பட்டது.
இனி இந்த நாட்டில் போர் இல்லை. அமைதிப் பூங்காவாக இலங்கை மிளிரும்.
இது வன்னி இறுதி யுத்தத்தை நிறைவு செய்த பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு ஆற்றிய உரை.
பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விட்டதென்ற செய்தி தெற்கில் பெரும் கொண்டாட்டங்களையும் களியாட்டங்களையும் ஏற்படுத்தியது.
தெற்கின் வீதிகளில் பெரும்பான்மையினர் ஒன்றுகூடி பாற்சோறு பொங்கி வருபவர் போபவர்களுக் கெல்லாம் வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தினர்.
இளைஞர்கள் பலர் இலங்கையின் தேசியக் கொடியைப் பிடித்தவாறு வீதிகளில் வலம் வந்தனர்.
எங்களுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து விடுதலை பெற்றுத்தந்த வெற்றி வீரன் – போர் நாயகன் மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி.
அவரே எம் கதாநாயகன் என்ற கோஷம் விண்ணை முட்டியது.
தெற்கின் பேருந்துகள் பல ராஜபக்ஷக்களின் புகைப்படங்களை அலங்கரித்தன. அதில் இனவாத சொற்பதங்கள் பல எழுதப்பட்டன.
ஆனாலும் வன்னிப்பெரு நிலப்பரப்பின், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஓர் இன அழிப்பே நடந்தேறியது என்ற உண்மையை பெரும்பான்மை சிங்கள மக்கள் ஏனோ சிந்திக்கத் தவறிவிட்டனர்.
ஒரு சிறிய பகுதி. அது இராணுவத்தினரால் பாதுகாப்பான பகுதியென அடையாளப்படுத்தப்பட்ட பகுதி.
அந்தப் பகுதிக்குள் இருந் தால் தாம் உயிர்பிழைத்து விடு
வோம் என்ற நம்பிக்கையில் இலட்சக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் அப்பகுதியில் கூடியிருக்க, கொஞ்சமும் மனச்சாட்சியற்று கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதில் கொத்துக் கொத்தாய் அப்பாவி உயிர்கள் பல பறித்தெடுக் கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் பல நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும் அவை இலங்கை ஆட்சியாளர்களினாலும் சிங்கள மக்களினாலும் நிராகரிக்கபட்டன.
ஈழத்தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு நீதிகோரிய அறவழிப் போர் ஐக்கிய நாடுகள் சபை வரை பேசப்பட்டிருந்தாலும் அவை வெறும் பேச்சளவில் முடிந்ததே தவிர செயலளவில் எவையும் நடக்கவில்லை என்பது துரதிஷ்டம்.
தினம் தினம் தமிழினம் தமக்கான நீதி கிடைக்கும் என ஏங்கித் தவித்தனராயினும் அந்த ஏக்கம் வெறும் ஏக்கத்துடனேயே முடிந்து போனது.
ஆயினும் மனித நீதிமன்றிலும் இறைவன் நீதிமன்று தீர்ப்பைச் சரியாக வழங்கும் என்பதை தமிழினம் பரிபூரணமாய் நம்பியது.
இனி அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என அவனிடமே பாரத்தைப் போட்டு விட்டு அமைதியாகியது தமிழினம்.
போர் வீரன் என்றும் கதாநாயகன் என்றும் யாரைச் சிங்கள மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினரோ அவர்களின் சாயம் வெழுக்கத் தொடங்கியது.
ராஜபக்ஷக்களை சிங்கள மக்கள் தூக்கி எறிந்தனர்.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டணியில் நல்லாட்சி மலர்ந்தது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி தேவமைந்தன் இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பலவற்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதில் வெளிநாட்டவர்கள் உட்பட 269இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டிருந்தனர்.
நல்லாட்சி அரசிற்குள் இருந்த உள்ளக அரசியல் முரண்பாடுகள், உயிர்த்த
ஞாயிறுக் குண்டுத் தாக்குதல் என்பவற்றின் எதிரொலி, நல்லாட்சி அரசு நலிவுற்றுப் போக, மீண்டும் ராஜபக்ஷக்களின் கைக்குள் ஆட்சி அதிகாரம் வந்தது.
இதில் ஒரு சிறிய மாற்றம் என்னவெனின், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் இப்போது ஜனாதிபதியாகவும், அப்போது
ஜனாதிபதியாக இருந்தவர் இப்போது பிரதமராகவும் பதவியேற்றனர்.
பதவி மோகத்தில் எதையும் செய்யத் துணிந்த ராஜபக்ஷக்களின் ஆட்சியைக் கவிழ்க்க இறைவன் வழி செய்தான்.
ஆம், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத பொருளாதார நெருக்கடி இலங்கையைச் சூழ்ந்தது.
பொறுமை கடலிலும் பெரிதாயினும் சிங்கள மக்களின் பொறுமை
சிதைந்து போனது.
அது ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்கள் எழுச்சியாக மாற்ற மடைந்தது.
முதலில் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராஜபக்ஷ விலகினார். மக்களின் போராட்டம் இன்னும் வீரியம் பெற்றது.
மாபெரும் மக்கள் சக்தி ஜனாதிபதி மாளிகைக்குள் சூழ்ந்துகொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பிச் சென்
றார்.
உண்மை, இறைவனின் தீர்ப்பின் முன் எவரும் எதையும் செய்து விட முடியாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிக்கொண்டு
வர சர்வதேசம் அழுத்தம் கொடுத்த நிலையில் இப்போது அதை யார் யாருக்காகச் செய்தார்கள் என்பது தொடர்பில் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய
அமைச்சர் பிமல் ரத்நாயக்க, “ஆட்சி அதிகாரங்களைக்கைப் பற்றுவதற்காக ராஜபக்ஷக்கள் செய்த சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்” என்று கூறியிருக்கிறார்.
ஆக, ஈழத்தமிழினத்தை கொத்துக் கொத்தாய் கொன்றொழித்
துவிட்டு இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு சர்வதேசத்தை நம்ப வைத்தவர்கள் மீது, ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக தமது சொந்த இனமக்களையே குண்டு வைத்துக் கொன்றார்கள் என்ற பழி சூழ்ந்துளளது.
“அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்” என்பதே ஈழத்தமிழினத்தின் இப்போதைய மனநிலை.
அபிமன்யு.


