ஷிரந்தி ராஜபக்ஷவின் வீடு தொடர்பான வதந்தி: CID-யில் முறைப்பாடு
Share
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரிவித்து, அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளதுடன், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் உள்ள ஆளுந்தரப்பின் 159 உறுப்பினர்களினதும் பல நரம்புகள் அதிரத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சட்டவிரோத வீடுகள் மாத்திரமல்ல, ஒரு விளையாட்டு வீடு இருப்பதாகத் தெரிந்தால் கூட இந்த அரசாங்கம் சும்மா இருக்கப்போவதில்லை என்பதை தாம் அறிவதாகவும், அவ்வாறான நிலையில் ஆதாரமற்ற பொய்ப் பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், நீதி அமைச்சரின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், நீதி அமைச்சர் தனது ஆதரவாளர்களுக்கு முன்னால் நின்றுகொண்டு வாய்ப்பாடு வாசிப்பதைப் போல நீதிமன்ற வழக்குகள் குறித்துப் பேசி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அரசியல் மேடைகளில் வழக்குகளின் விபரங்களை அமைச்சர் பகிரங்கப்படுத்துவதன் ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் சுயாதீனத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து பாரிய சந்தேகம் எழுவதாகவும், இவ்வாறான நிலையில் விசாரணைகளை எவ்வாறு விசுவாசிப்பது என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.


