விஜய் – ஆளுநர் சந்திப்பு – வெளியாகுமா ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு?
Share
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எல். அல்கேகருடனான சந்திப்பின்போது, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் கோரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5 உறுப்பினர்கள்) தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில், இன்னும் 6 பேர் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படுகிறது. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இதனிடையே, தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இன்று காலை வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாததால் மீண்டும் ஆளுநரை விஜய் சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் தரப்பில் பெரும்பான்மைக்கு தேவையான 118 பேர் பட்டியல் கோரப்பட்டதாகவும், ஆட்சி அமைத்த பிறகு பேரவையில் நிரூபிக்கிறோம் என்று தவெக தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இரண்டாவது நாளாக இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய் மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 113 (காங்கிரஸ் சேர்த்து) உறுப்பினர்களை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி அமைக்கப் போகிறீர்கள்? என்று ஆளுநர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் ஒரு தொகுதியில் இராஜிநாமா செய்யும் பட்சத்தில், பெரும்பான்மையை எட்ட இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படும், எந்தெந்த கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறது? என்றும் ஆளுநர் விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு விஜய்யும், தவெக நிர்வாகிகளும் விளக்கம் அளித்ததாகவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகைக்குள் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சந்திப்பை முடித்துக் கொண்டு விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் வெளியேறியுள்ளனர்.
விஜய் முதல்வராகப் பதவியேற்க இருந்த சிக்கல்கள் தீர்ந்ததா? என்பது தெரியவில்லை. தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பதில்களில் ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டிருந்தால், ஒரு சில மணி நேரங்களில் ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


