கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிய கதை
Share
மே தினம். உலகம் முழுவதும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அனுஷ் டிக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் முதலாளித்துவ வர்க்க்தால் நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு உழைத்துக் கொடுக்கின்ற அடிமைகளாக இருந்தனர்.
ஆம் ஓய்வு இல்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. நலச்சேசைவகள் எதுவும் இல்லை என அடிமைவாழ்வுக்குள் தொழிலாளர் வர்க்கம் அகப்பட்டிருந்தது.
இங்குதான் உழைப்பாளர்களின் உரிமைக்கான போராட்டம் வெடிக்கிறது.
உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைப் போராட் டம் வெற்றியளித்தபோது உழைப்பாளர்களின் வேலை நேரம் எட்டுமணித்தியாலயம் என வரையறுக்கப்படுகிறது.
இவ்விதம் தொழிலாளர்களின் வேலை நேரம் வரையறுக்கப்பட்டதனூடு தொழிலாளர் களின் உரிமை நிலைப்பாட்டது.
அந்த நாளே மே தினம் ஆயிற்று.
எனினும் உலக அரங்கில் தொழிலாளர்கள் உரிமை பெற்ற மே தினம் அரசியல் தரப்பு களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஒவ்வொரு அரசியல் கடசிகளும் மே தினக் கொண்டாட்டங் களை முன்னெடுத்தன.
நல்லது. தொழிலாளர் வர்க்கம் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டிய தொழிலளர் தினத்தை அரசியல் கட்சிகள் தங்களின் உபாயமாக எடுத்துக் மே தினக் கூட்டங்களை நடத்த, கட்சி ஆதரவாளர்கள் தத்தம் கட்சிகள் நடத்து கின்ற மே தினக் பேரணிகளிலும் மே தினக் கூட்டங்களிலும் பங்கெற்றனர்.
அதாவது தொழிலாளர் தினமாகிய மே முதலாம் திகதி அரசியல் கட்சிகளின் நாளாக மாறிவிட, எங்கும் கூட்டங்கள், உரிமைக் கோசங்கள் என்பதாக மே தினக் கொண்டாட்டங்கள் அமைந்தன.
இருந்தும் அதைக்கூட நாம் தமிழர் இழந்து விட்டோம் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
ஆம், முன்னயை காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் மே தினக் கூட்டங்களை – பேரணிகளை நடத்த அதில் மக்கள் திரண்டு பங்கேற்பர்.
எங்கும் சிறப்புக் கொடிகள் பட்டொளிவீசிப் பறக்கும் சோடினைகள், ஊர்திப் பவனிகள், தொழிலாளர் வர்க்கத்தின் துன்பங்களை வெளிப்படுத்தும் பதாகைகள் என எங்கும் உழைப்பாளர்களின் உரிமைக்குரல் ஒலிக்கும்.
என்ன செய்வது அந்தத் தொழிலாளர் தினத்தைக்கூட சிறப்பாக நடத்த முடியாத அளவில் நம் தமிழ்க் கட்சிகள் பலமிழந்து நிற்கின்றன.
உண்மை ஒற்றுமையில்லை.
அரசியல் நேர்மை இல்லை. தம் இன மக்களை நேசிக்கின்ற உன்னதமான பாசம் இல்லை. ஏன்? மக்களின் ஆதரவும் இல்லை எனும் போது தமிழர் தேசத்தில் மே தினங்களும் அமைதியாகக் கடந்து செல்கின்றன.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.


