அன்று குற்றவாளியாய் தலை குனிந்து நின்றவன் இன்று சட்டத்தரணியாய் தலை நிமிர்ந்து நிற்கின்றான்
Share
31 ஆண்டுகள் சிறைவாசியாக நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கிய பேரறிவாளன், இப்போது வழக்கறிஞராக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்.
கர்நாடகாவில் சட்டம் பயின்ற அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார்.
அவரிடம் இந்தப் பயணம் குறித்து ஜூனியர் விகடனில் வெளிவந்த கட்டுரை இங்கு பிரசுரமாகிறது
“சிறையிலிருந்து விடுதலையானபோது, ‘நான் கொஞ்சம்
வெளிக்காற்றை சுவாசிக்கணும்… நிதானமாக மூச்சு விடணும்… நான் என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்’ என்றெல்லாம் தெரிவித்திருந்தீர்கள்.
இப்போது திடீரென வழக்கறிஞராக மாறி நிற்கிறீர்களே… ஏன் இந்த வேகம்?”
“வேகம் என்று சொல்வதைக் காட்டிலும் வழக்கறிஞராக வேண்டும் என்பது எனக்கு ஒரு தேவையாகவே இருந்தது.
மிக நீண்ட சட்டப் போராட்டத்தின் மூலமாகத்தான் நான் விடுதலையாகியிருக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால் எளிதாக விடுதலையாகி விடுவோம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன்.
ஆனால், அது ஒவ்வொரு முறையும் தவறிப்போனபோதுதான், நாம் குறைபாடுள்ள ஒரு நீதி அமைப்பு முறைக்குள் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
பிறகு, அதிலிருந்து மீண்டுவரவேண்டும் என்றால், முழு மையான சட்ட அறிவை நாம் பெற்றால்தான் முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
அதனால், சிறைக்குள்ளேயே சட்டம் சார்ந்து பல விடயங்களைப் படித்திருக்கிறேன். பல தீர்ப்புகளை வாசித்திருக்கிறேன். ஆனால், முறையாகச் சட்டம் படிப்பதற்கான வாய்ப்புகள் சிறைக்குள் இல்லை. அதனால்தான், வெளியில் வந்த உடனேயே படித்து வழக்கறிஞராகி விட்டேன்!’’
“மரண தண்டனை சிறைவாசி – வழக்கறிஞர்… அந்த நேரத்தை எப்படி உணர்ந்தீர்கள்?”
“அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விபரிக்க முடியவில்லை. நான் வழக்கறி
ஞரான இரவு முழுவதும் தூங்கவே இல்லை. பைக்கில் வெளியே சுற்றிக்கொண்டேயிருந்தேன்.
காரணம், எந்தச் சட்டத்தின் பெயரால் அல்லது எந்தச் சட்டத்தின் அறியாமை என்னை இவ்வளவு ஆண்டுகள் சிறையில் வைத்திருந்ததோ, அதே சட்டத்தை முறையாக அறிந்து, இன்னொருவரின் நீதிக்காக வழக்கறிஞர் உடையுடன் நான் வாதாடக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதை நினைக்கும்போது, ஒரு வகையான மனநிறைவு ஏற்படுகிறது.’’
“உங்களுடைய அம்மா எப்படி உணர்ந்தார்கள்… சிறு வயதில் நீங்கள் என்ன
ஆக வேண்டும் என அம்மா ஆசைப்பட்டார்கள்?’’
“அம்மா நெகிழ்ந்து, ‘வக்கீல் ஆகிட்டியேடா…’ அப்படி என்று சொன்னாங்க.
அவங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அவங்களுக்கு மட்டுமல்ல, என் அப்பா, சகோ தரிகள் உள்ளிட்ட என் குடும்பத்தினர் அனைவருக்குமே ரொம்ப மகிழ்ச்சி.
பார் கவுன்சிலில் என் வழக்கறிஞர் பதிவு ஏற்றுக்கொள் ளப்பட்ட தருணத்தில் என் அம்மா என்னோடு இல்லை. அந்த வருத்தம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அதைத் தாண்டி ‘பையன் நல்ல இடத்துக்கு வந்திருக்கிறான்’ என்கிற மனநிறைவு அவர்களுக்கு இருக்கிறது.’’
“உங்கள் குடும்பத்தினர் பொதுவாக இயக்க, கள அரசியலில் ஈடுபாடு உடையவர்கள். எதிர்காலம் குறித்து நீங்கள் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?’’
“தமிழ்நாட்டில் வழக்கறிஞர் தொழிலையும் அரசியலையும் அதிகமாக இணைத்து விட்டார்களோ என்கின்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது.
வழக்கறிஞர் தொழிலுக்கென்று ஓர் உழைப்பு இருக்கிறது. வழக்குகள் குறித்து மிக ஆழமான வாசிப்பு தேவைப்படுகிறது. வடமாநிலங்களில் மூத்த வழக்கறிஞர்கள்கூட அதை முறையாகச் செய்கிறார்கள்.
ஆனால், நம் ஊரில் அது இன்னும் அதிகரிக்க வேண்டும். என்னுடைய அனுப வத்திலிருந்துதான் இதை நான் சொல்கிறேன். அது தவறாகக்கூட இருக்கலாம்.
ஆனால், நான் முழுமையான வழக்கறிஞராக மட்டுமே இருக்க விரும்புகிறேன். மனித உரிமை சார்ந்த வழக்குகளை எடுத்து நடத்த ஆசைப்படுகிறேன்.’’
“வழக்கறிஞராகும் ஆசை உங்களுக்குத் தனிப்பட்ட நபர்களைப் பார்த்து உருவானதா, இல்லை வழக்குகள் குறித்து மீண்டும் மீண்டும் படித்ததால் உண்டானதா?’’
“நான் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை மீண்டும் மீண்டும் வாசித்திருக்கிறேன். பலமுறை படிக்கும்போது நமக்கு ஒரு புதிய கோணம் உருவாகும். அப்படியே தான் வழக்கறிஞராக வேண்டும் என்கிற ஆர்வமும் உண்டானது.
ஆனால், ஒவ்வொரு தீர்ப்பிலும் ஏராளமான நபர்கள் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். அவர்களின் வழியாகத்தான் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கும்.
அவர்களும் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்.’’
“இந்தத் துறையில் உங்க ளுக்கு ‘ரோல் மாடல்’ யார்?’’
“நீதியரசர்களில் கிருஷ்ணய்யர், வழக்கறிஞர்களில் கோபால் சங்கரநாராயணன். என்னுடைய வழக்கில் அவர் காட்டிய ஈடுபாட்டை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
சட்டத்தின் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி என் விடுதலைக்காகப் போராடினார்.’’
“நீங்கள் எப்படிப்பட்ட வழக்கறிஞராக இருக்க விரும்பு கிறீர்கள்?’’
“நான் மனித உரிமை சார்ந்து இயங்க வேண்டும் என்று விரும்புகிறேன். தினமும் கிரிமினல் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞராக என்னால் இருக்க முடியாது.
சிறைவாசிகள் மற்றும் சிறைப்பட்டு வருபவர்களுக்காகப் பணியாற்ற விரும்புகிறேன்.
80களிலும் 90களிலும் மனித உரிமை அமைப்புகள் சிறைவாசி
களுக்காக நின்றன. ஆனால், இப்போது அத்தகைய சூழல் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
எனவே, சிறைவாசிகளின் உரி மைகள் (Prisoners’ Rights) மற்றும் முன்கூட்டிய விடுதலை போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்.’’


