வெனிசுலா நிலநடுக்கம்: ஆர்ஜென்டீன கால்பந்து வீரரின் மனைவி, பிள்ளைகள் பலி!
Share
வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி, ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் பதிவான இரட்டை நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை குறைந்தது 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரழிவில், வெனிசுலாவின் ‘கிளப் ஸ்போர்ட் மார்டிமோ டி லா குவைரா’ அணிக்காக விளையாடி வரும் 38 வயதான லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி யானினா மரநெல்லா மற்றும் அவரது பிள்ளைகளான ஆரோன், ஐன்ஹோவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 74 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னரே இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அவரது கால்பந்து கிளப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், லூகாஸின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.
இவர்களது மறைவை லூகாஸ் ட்ரெஜோவின் குடும்ப நண்பரும் கால்பந்து வீரருமான எட்சன் டொர்டோலெரோவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த லூகாஸின் குடும்பத்தினரைத் தேடும் பணிகளுக்காக அவரது தந்தையும் சகோதரரும் ஆர்ஜென்டீனாவிலிருந்து வெனிசுலா விரைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த நிலநடுக்கப் பேரழிவில் குறித்த கால்பந்து கிளப்பைச் சேர்ந்த 14 வயது இளம் வீரரான விக்டர் பாலாசியோஸ் மற்றும் கிளப் ஊழியரான அத்ரியானா அரங்குரென் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலாவில் தற்போதும் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், குறைந்தது 68,900 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.


