பாகிஸ்தானில் படகு விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் பலி!
Share
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஏரி ஒன்றில், சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் ஏரி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல சுற்றுலாத் தலமான அப்பர் ஸ்வாட் மாவட்டத்தின் கலாப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ‘சைபுல்லா’ ஏரியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இந்த ஏரியில் படகு பயணம் மேற்கொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஏரியில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விபத்து நேர்ந்ததற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் சோஹைல் அப்ரிடி, இந்த விபத்து குறித்து உடனடியாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஏதேனும் அலட்சியமோ அல்லது பாதுகாப்பு விதிமீறல்களோ நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


